சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.15 திருக்காறாயில்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கண்ணாயிரநாதர், தேவியார் – கயிலாயநாயகியம்மை.

பண்இந்தளம்

154

நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்
தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில் ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே.-01

155

மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்
விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்
நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற்
பதியானே யென்பவர் பாவமி லாதாரே.-02

156

விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்
மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாங்
கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்
எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே.-03

157

தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே
சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்
மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.-04

158

கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே.-05

159

ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர
வேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும்
போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்
நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே.-06

160

சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்
ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.-07

161

கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்
எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்
கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்
அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.-08

162

பிறையானே பேணிய பாடலோ டின்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில்
உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே.-09

163

செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்
படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை
கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்
குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.-10

164

ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்
ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற
பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.-11

திருச்சிற்றம்பலம்