சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருமூலர் பெருமான் அருளிய பத்தாம் திருமுறை

திருமந்திரம்

1237 பதிகங்கள் – 3000 பாடல்கள் 


10.01 பாயிரம் – 06. அவையடக்கம்


திருச்சிற்றம்பலம்


95.
ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறி வார்இந்த அகலமும் நீளமும்
பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறி யாமை விளம்புகின் றேனே. 1

96.
பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்
ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்
நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே. 2

97.
மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலு மாமே. 3

98.
தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறா இருந்து துதிசெயும்
பத்திமை யால் இப் பயனறி யாரே. 4

திருச்சிற்றம்பலம்