சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.104 திருப்புகலி

சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை

பண் – வியாழக்குறிஞ்சி

1122

ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை
சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான்
ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த
ஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே.-1.104.1

1123

ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று
சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய
ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல
மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே.-1.104.2

1124

ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ
நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன்
பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற
வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே.-1.104.3

1125

வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங்
கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்
அள்ளல் விளைகழனி அழகார்விரைத் தாமரைமேல் அன்னப்
புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே.-1.104.4

1126

சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம்
ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன்
வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர்
பாட இனிதுறையும் புகலிப் பதியாமே.-1.104.5

1127

மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து
நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம்
அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும்
புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே.-1.104.6

1128

மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள்
கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ்
செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம்
அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே.-1.104.7

1129

வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும்
நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன்
பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள்
ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே.-1.104.8

1130

தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி
ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம்
மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே.-1.104.9

1131

வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல்
வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த
புந்தியினார் பயிலும் புகலிப் பதிதானே.-1.104.10

1132 வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப்
போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்
ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே.-1.104.11

திருச்சிற்றம்பலம்