சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை
136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்
1.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர்
இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
திருச்செங்கோடு என வழங்குகின்றது.
சுவாமிபெயர் – அர்த்தநாரீசுவரர், தேவியார் – அர்த்தநாரீசுவரி.
பண் – வியாழக்குறிஞ்சி
1152
வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.-1.107.1
1153
அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.-1.107.2
1154
பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல
ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே.-1.107.3
1155
வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங்
காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே.-1.107.4
1156
பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல
பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்
மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே.-1.107.5
1157
ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே.-1.107.6
1158
நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே.-1.107.7
1159
மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே.-1.107.8
1160
செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற
அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான்
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே.-1.107.9
1161
போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழநும் வினையான வீடுமே.-1.107.10
1162
அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந்
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்
நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே.-1.107.11
திருச்சிற்றம்பலம்