சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.108 திருப்பாதாளீச்சரம்

பண் – வியாழக்குறிஞ்சி

1163

மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே.-1.108.1

1164

நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்
ஆடர வம்பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
பாடலி னாலினியான் உறைகோயில் பாதாளே.-1.108.2

1165

நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற் புரம்மூன் றெரித்துகந்தான்
தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே.-1.108.3

1166

அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.-1.108.4

1167

பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்
தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப்
பாய்புன லும்முடையான் உறைகோயில் பாதாளே.-1.108.5

1168

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும்
விண்ணியல் மாமதியு முடன்வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே.-1.108.6

1169

விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் துரைவேதம் நான்குமவை
பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.-1.108.7

1170

மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்
தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.-1.108.8

1171

தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடிக்
காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்
பூமரு வுங்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே.-1.108.9

1172

காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவிட் டன்று
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே.-1.108.10

1173 பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத் திருப்பாரே.-1.108.11

திருச்சிற்றம்பலம்