சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.119 திருக்கள்ளில்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சிவானந்தேசுவரர், தேவியார் – ஆனந்தவல்லியம்மை.

பண் – வியாழக்குறிஞ்சி

1282

முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே.-1.119.1

1283

ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
ஓடலாற் கலனில்லான் உறை பதியால்
காடலாற் கருதாத கள்ளில் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.-1.119.2

1284

எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான்
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.-1.119.3

1285

பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான்
நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே.-1.119.4

1286

விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்
கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான்
அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே.-1.119.5

1287

நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான்
மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே.-1.119.6

1288

பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங்
குடியாவூர் திரியினுங் கூப்பி டினுங்
கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான்
அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே.-1.119.7

1289

திருநீல மலரொண்கண் தேவி பாகம்
புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.-1.119.8

1290

வரியாய மலரானும் வையந் தன்னை
உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங்
கரியானும் அறியாத கள்ளில் மேயான்
பெரியானென் றறிவார்கள் பேசு வாரே.-1.119.9

1291

ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே.-1.119.10

1292

திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு
பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல
முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப்
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.-1.119.11

திருச்சிற்றம்பலம்