இத்தலம் நடுநாட்டிலுள்ளது – இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் – பழமலைநாதர்; தேவியார் – பெரியநாயகியம்மை

பண் – நட்டபாடை

119      

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாங்
கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.          1.12.1

120      

தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.          1.12.2

121      

விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்
டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு
முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.          1.12.3

122      

சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா
நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்
அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்
முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.          1.12.4

123      

அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார்
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.          1.12.5

124      

ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற்
கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில்
சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.          1.12.6

125      

தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை (*)முடிய
மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்
விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை
முழவோடிசை (**)நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே.
(*) முடியர் என்றும் பாடம்.
(**) நடமுன் செயும் என்றும் பாடம்.   1.12.7

127      

செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில்
மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா (*)
முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே.
(*) குறை யில்லா என்றும் பாடம்.   1.12.8

127      

இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய
செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்
புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே
முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.          1.12.9

128      

அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்
மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்
கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.          1.12.10

129       முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்
புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.   1.12.11

திருச்சிற்றம்பலம்