சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.126 திருக்கழுமலம் – திருத்தாளச்சதி

பண் – வியாழக்குறிஞ்சி

1359

பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப் பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ் சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்
சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற் தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங்
கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக் காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.-1.126.1

1360

பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப்பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்
உச்சத்தால் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணே றூராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெயிசை
வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார் வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங்
கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங் காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே.-1.126.2

1361

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின் சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ
டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப் பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின் போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங்
கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.-1.126.3

1362

அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத் தாறேவேறே வானாள்வார் அவரவ ரிடமதெலாம்
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரும் மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ் மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங்
கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக் காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.-1.126.4

1363

திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச் சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப் போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத் தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங்
கைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக் காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே.-1.126.5

1364

செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ் சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக் கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும் பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங்
கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக் காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.-1.126.6

1365

பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப் பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய் மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்
சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள் சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங்
கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள் காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.-1.126.7

1366

செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற் சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன்
இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற் பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விரல் அவண்நிறுவிட்
டம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற் காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங்
கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக் காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.-1.126.8

1367

பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப் பானாமால்தா னாமேயப் பறவையி னுருவுகொள
ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ னோதானோதான் அஃதுணரா துருவின தடிமுடியுஞ்
சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின் றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங்
கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.-1.126.9

1368

தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத் தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும்
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க் கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும் போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற் காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.-1.126.10

1369

கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக் கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத்
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்
எஞ்சத்தேய் வின்றிக்கே இமைத்திசைத் தமைத்தகொண் டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா
வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர் மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே.-1.126.11

திருச்சிற்றம்பலம்