இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பிரமபுரிநாயகர், தேவியார் – பெரியநாயகியம்மை.

பண் – நட்டபாடை

217  

புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுணம் அமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரும் உயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே. 1.21.1

218

மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர்முதல் உலகுகள் நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகடல் நடுவறி துயிலமர் அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரம்நினை பவர்திரு மகளொடு திகழ்வரே. 1.21.2

219

பழுதில கடல்புடை தழுவிய படிமுத லியவுல குகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் குலம்மலி தருமுயி ரவையவை
முழுவதும் அழிவகை நினைவொடு முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகு முலகிலே. 1.21.3

220

நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்
குறைவில பதமணை தரஅருள் குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே. 1.21.4

221

சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொருள் நியதமும் உணர்பவர்
தனதெழி லுருவது கொடுஅடை தகுபர னுறைவது நகர்மதில்
கனமரு வியசிவ புரம்நினை பவர்கலை மகள்தர நிகழ்வரே.  1.21.5

222

சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி யடைவகை நினையர னுறைபதி
திருவளர் சிவபுரம் நினைபவர் திகழ்குலன் நிலனிடை நிகழுமே.   1.21.6

223  

கதமிகு கருவுரு வொடுவுகி ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிகழ் எயிறதன் நுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய எழிலரி வழிபட அருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுரம் நினைபவர் நிலவுவர் படியிலே. 1.21.7

224

அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை இருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுரம் நினைபவர் செழுநில னினில்நிகழ் வுடையரே. 1.21.8

225

அடல்மலி படையரி அயனொடும் அறிவரி யதொரழல் மலிதரு
சுடருரு வொடுநிகழ் தரவவர் வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுத லமர்கண துடையுரு வெளிபடு மவன்நகர்
திடமலி பொழிலெழில் சிவபுரம் நினைபவர் வழிபுவி திகழுமே.   1.21.9

226

குணமறி வுகள்நிலை யிலபொரு ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர னுறைதரு பதியுல கினில்நல
கணமரு வியசிவ புரம்நினை பவரெழி லுருவுடை யவர்களே. 1.21.10

227

திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி யொருபதும் நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர் தரநலம் மிகுவரே.   1.21.11

திருச்சிற்றம்பலம்