சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.33 திரு அன்பிலாலந்துறை

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
அன்பில் என வழங்கப்பெறும்.
சுவாமிபெயர் – சத்திவாகீசர், தேவியார் – சவுந்தரநாயகியம்மை.

பண் – தக்கராகம்

349

கணைநீடெரி மாலர வம்வரை வில்லா
இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்
பிணைமாமயி லுங்குயில் சேர்மட அன்னம்
அணையும்பொழி லன்பி லாலந் துறையாரே.                                       1.33.1

350

சடையார்சது ரன்முதி ராமதி சூடி
விடையார்கொடி யொன்றுடை யெந்தை விமலன்
கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை
அடையார்பொழில் அன்பி லாலந்துறை யாரே.          1.33.2

352

ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப்
பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்
நீருண்கய லும்வயல் வாளை வராலோ
டாரும்புனல் அன்பி லாலந்துறை யாரே.          1.33.3

353

பிறையும்மர வும்முற வைத்த முடிமேல்
நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்
மறையும்பல வேதிய ரோத ஒலிசென்
றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே.          1.33.4

354

நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல்
கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்
மாடும்முழ வம்மதி ரம்மட மாதர்
ஆடும்பதி அன்பி லாலந்துறை யாரே.          1.33.5

355

நீறார்திரு மேனிய ரூனமி லார்பால்
ஊறார்சுவை யாகிய உம்பர் பெருமான்
வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி
ஆறார்வயல் அன்பி லாலந்துறை யாரே.    1.33.6

356

செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட
படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக்
கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்
அடியார்தொழும் அன்பி லாலந்துறை யாரே.          1.33.7

357

விடத்தார் திகழும்மிட றன்நட மாடி
படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி
கொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார
அடர்த்தாரருள் அன்பி லாலந்துறை யாரே.          1.33.8

358

வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்
பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை
சுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம்
அணங்குந்திக ழன்பி லாலந்துறை யாரே.          1.33.9

359

தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்
நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்
வெறியார்மலர் கொண்டடி வீழு மவரை
அறிவாரவர் அன்பி லாலந்துறை யாரே.    1.33.10

360

அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்
பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்
விரவாகுவர் வானிடை வீடெளி தாமே.          1.33.11

திருச்சிற்றம்பலம்