சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.36 திரு ஐயாறு

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – செம்பொன்சோதீசுரர், தேவியார் – அறம்வளர்த்தநாயகியம்மை.

பண் – தக்கராகம்

382

கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே.           1.36.1

383

மதியொன் றியகொன் றைவடத்தன்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வும்
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே.           1.36.2

384

கொக்கின் னிறகின் னொடுவன்னி
புக்க சடையார்க் கிடமாகுந்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே.           1.36.3

385

சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ருமையாறே.           1.36.4

386

உமையா ளொருபா கமதாகச்
சமைவார் அவர்சார் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்
அமையா வருமந் தணையாறே.           1.36.5

387

தலையின் தொடைமா லையணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே.           1.36.6

388

வரமொன் றியமா மலரோன்றன்
சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
அரவங் கொடுசே ருமையாறே.           1.36.7

389

வரையொன் றதெடுத் தஅரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே.           1.36.8

390

சங்கக் கயனும் மறியாமைப்
பொங்குஞ் சுடரா னவர்கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
அங்கிக் கெதிர்காட் டுமையாறே                                        1.36.9

391

துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணையந் தணையாறே.           1.36.10

392 கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலமார் தருஞான சம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே. 1.36.11

திருச்சிற்றம்பலம்