சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.40 திருவாழ்கொளிபுத்தூர்  

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாணிக்கவண்ணவீசுரர், தேவியார் – வண்டார்பூங்குழலம்மை.

பண் – தக்கராகம்

426

பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப் பூதகணம் புடை சூழக்
கொடியுடை யூர்திரிந் தையங் கொண்டு பலபல கூறி
வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமல ரிட்டுக் கறைமிடற் றானடி காண்போம்.       1.40.1

427

அரைகெழு கோவண ஆடையின் மேலோர் ஆடரவம் அசைத் தையம்
புரைகெழு வெண்டலை யேந்திப் போர்விடை யேறிப் புகழ
வரைகெழு மங்கைய தாகமொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரைகெழு மாமலர் தூவி விரிசடை யானடி சேர்வோம்.       1.40.2

428

பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப் புன்றலை யங்கையி லேந்தி
ஊணிடு பிச்சையூ ரையம் உண்டி யென்று பலகூறி
வாணெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்
தாணெடு மாமல ரிட்டுத் தலைவன தாள்நிழல் சார்வோம்.       1.40.3

429

தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை தாழ்சடை மேலவை சூடி
ஊரிடு பிச்சை கொள்செல்வம் உண்டி யென்று பலகூறி
வாரிடு மென்முலை மாதொரு பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
காரிடு மாமலர் தூவி கறைமிடற் றானடி காண்போம்.       1.40.4

430

கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் காதிலொர் வெண்குழை யோடு
புனமலர் மாலை புனைந்தூர் புகுதி யென்றே பலகூறி
வனமுலை மாமலை மங்கையொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்
இனமல ரேய்ந்தன தூவி எம்பெரு மானடி சேர்வோம்.      1.40.5

431

அளைவளர் நாகம் அசைத்தன லாடி அலர்மிசை அந்தணன் உச்சிக்
களைதலை யிற்பலி கொள்ளுங் கருத்தனே கள்வனே யென்னா
வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தளையவிழ் மாமலர் தூவித் தலைவன தாளிணை சார்வோம். 1.40.6

432

அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து வழிதலை யங்கையி லேந்தி
உடலிடு பிச்சை யோடைய முண்டி யென்று பலகூறி
மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தடமல ராயின தூவி தலைவன தாள்நிழல் சார்வோம்.       1.40.7

433

உயர்வரை யொல்க எடுத்த அரக்கன் ஒளிர்கட கக்கை யடர்த்து
அயலிடு பிச்சை யோடையம் ஆர்தலை யென்றடி போற்றி
வயல்விரி நீல நெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்
சயவிரி மாமலர் தூவி தாழ்சடை யானடி சார்வோம்.       1.40.8

434

கரியவன் நான்முகன் கைதொழு தேத்த காணலுஞ் சாரலு மாகா
எரியுரு வாகி யூரையம் இடுபலி யுண்ணி யென்றேத்தி
வரியர வல்குல் மடந்தையொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்
விரிமல ராயின தூவி விகிர்தன சேவடி சேர்வோம்.      1.40.9

435

குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யில் கொள்கை யினார் புறங்கூற
வெண்டலை யிற்பலி கொண்டல் விரும்பினை யென்று விளம்பி
வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தொண்டர்கள் மாமலர் தூவத் தோன்றி நின்றான் அடிசேர்வோம்.   1.40.10

436

கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங் கரைபொரு காழிய மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம் பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும் வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர்கெடு தல்எளி தாமே.       1.40.11

திருச்சிற்றம்பலம்