சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.46 திருஅதிகைவீரட்டானம்

இத்தலம் நடுநாட்டில் கெடிலநதிக்கு வடபாலுள்ளது.
சுவாமிபெயர் – அதிகைநாதர், வீரட்டானேசுவரர்;
தேவியார் – திருவதிகைநாயகி.

பண் – தக்கராகம்

493

குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே.          1.46.1

493

அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக்
கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசிச்
சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே.          1.46.2

494

ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப்
பாடல் மறைவல்லான் படுதம்பலி பெயர்வான்
மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே.          1.46.3

496

எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே.          1.46.4

497

கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்
திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள்
எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ
விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே.          1.46.5

498

துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி
இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி
வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள்
விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே.          1.46.6

499

பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழப் புலித்தோ லுடையாகக்
கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்
வேத முதல்வன்நின் றாடும்வீரட் டானத்தே.          1.46.7

500

கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட
ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
வில்லால் எயிலெய்தான் ஆடும்வீரட் டானத்தே.          1.46.8

501

நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்
பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக்
கடியார் கழுநீலம் மலரு மதிகையுள்
வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே.          1.46.9

511

அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோ டுடனேந்தி உடைவிட் டுழல்வார்கள்
உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி
விரைதோ யலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே.          1.46.10

512 ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச்
சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
வாழுந் துணையாக நினைவார் வினையிலாரே. 1.46.11

திருச்சிற்றம்பலம்