உ
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஆரணியச்சுந்தரர்; தேவியார் – அகிலாண்டநாயகியம்மை.
பண் – நட்டபாடை
45
செய்யரு கேபுனல் பாயஓங்கிச் செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்
கையரு கேகனி வாழையீன்று கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப்
பையரு கேயழல் வாயவைவாய்ப் பாம்பணை யான்பணைத் தோளிபாகம்
மெய்யரு கேயுடை யானையுள்கி விண்டவ ரேறுவர் மேலுலகே. 1.5.1
45 * இப்பதிகத்தில் 2-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.5.2
46
திரைகளெல் லாமல ருஞ்சுமந்து செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக் காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல உத்தம ராயுயர்ந் தாருலகில்
அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க் காட்செய அல்லல் அறுக்கலாமே. 1.5.3
47
தோலுடை யான்வண்ணப் போர்வையினான் சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு
நூலுடை யானிமை யோர்பெருமான் நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்
காலுடை யான்கரி தாயகண்டன் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
மேலுடை யானிமை யாதமுக்கண் மின்னிடை யாளொடும் வேண்டினானே. 1.5.4
48
சலசல சந்தகி லோடும்உந்திச் சந்தன மேகரை சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை யார்த்துமண்டி பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்
கலகல நின்றதி ருங்கழலான் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்க ளேத்தநின்ற சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே. 1.5.5
49
தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாங்
களையவி ழுங்குழ லார்கடியக் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்
துளைபயி லுங்குழல் யாழ்முரல துன்னிய இன்னிசை யால்துதைந்த
அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க் காட்செய அல்லல் அறுக்கலாமே. 1.5.6
50
முடிகையி னாற்றொடும் மோட்டுழவர் முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக்
கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி காதல்செய் தான்கரி தாயகண்டன்
பொடியணி மேனியி னானையுள்கிப் போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின்
றடிகையி னாற்றொழ வல்லதொண்டர் அருவினை யைத்துரந் தாட்செய்வாரே. 1.5.7
51
பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழல் நாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான் வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்கன லாடுகண்ணாற் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடை யான்குறட் பூதச்செல்வன் குரைகழ லேகைகள் கூப்பினோமே. 1.5.8
52
செற்றவர் தம்அர ணம்மவற்றைச் செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங்
கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
உற்றவர் தாமுணர் வெய்திநல்ல உம்பருள் ளார்தொழு தேத்தநின்ற
பெற்றம ரும்பெரு மானையல்லால் பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே. 1.5.9
53
ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த் துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்
குண்டர்க ளோடரைக் கூறையில்லார் கூறுவ தாங்குண மல்லகண்டீர்
அண்டம றையவன் மாலுங்காணா ஆதியி னானுறை காட்டுப்பள்ளி
வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே. 1.5.10
54
பொன்னியல் தாமரை நீலம்நெய்தல் போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக்
கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக் காதல னைக்கடற் காழியர்கோன்
துன்னிய இன்னிசை யாற்றுதைந்து சொல்லிய ஞானசம் பந்தன்நல்ல
தன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந் தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.
திருச்சிற்றம்பலம்