சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.70 திரு ஈங்கோய்மலை

பண் – தக்கேசி

754  

வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித்
தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக்
கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த
ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.                                             1.70.1

755  

சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக்
கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே
பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார்
ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே.                                             1.70.2

756  

கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார்
விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு
பெண்கொள்திருமார் பதனில்பூசும் பெம்மானெமையாள்வார்
எண்கும்அரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.                                             1.70.3

757  

மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங்
குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழப்
பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட்டெரியாடும்
இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.                                             1.70.4

758  

நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார்
கந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன்சடைதாழப்
பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட்டெரியாடும்
எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய்மலையாரே.                                             1.70.5

759  

நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றையரவோடும்
ஆறார்சடையார் அயில்வெங்கணையால் அவுணர்புரம்மூன்றுஞ்
சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கண்அடல்வெள்ளை
ஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.                                             1.70.6

760  

வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை
நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.                                             1.70.7

761  

பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய
அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால்
நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த
இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.                                             1.70.8

762  

வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான்மகளோடும்
பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான்திருமேனி
அரியோடயனும் அறியாவண்ணம் அளவில்பெருமையோ
டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய்மலையாரே.                                             1.70.9

763  

பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும்
மண்டைகலனாக் கொண்டுதிரியும் மதியில்தேரரும்
உண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோடுடனாகி
இண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய்மலையாரே.                                            1.70.10

764   விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள்
அழலார்வண்ணத் தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன்
எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே.      1.70.11

திருச்சிற்றம்பலம்