சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சித்தநாதேசர், தேவியார் – அழகாம்பிகையம்மை.

பண் – தக்கேசி

765
பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர்
கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர்கங்காளர்
மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையில்மகிழ்வெய்திச்
சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.                                                   1.71.1

766

பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே
தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர்விடையேறிக்
கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக்குளிர்பொய்கைச்
செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச்சரத்தாரே.                                                   1.71.2

767

முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல்
பொடிகொள்நூலர் புலியினதளர் புரிபுன்சடைதாழக்
கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலாரினம்பாயக்
கொடிகொள்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.                                                   1.71.3

768

பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி
மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரும்ஒருகாதர்
பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்துசெண்பகஞ்
சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.                                                   1.71.4

769

நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர்
பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே
தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்லச்
சீரார்கோலம் பொலியும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.                                                   1.71.5

770
நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை
தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத்தெழிலார்வந்
தீண்டுமாடம் எழிலார்சோலை இலங்குகோபுரந்
தீண்டுமதியந் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.                                                   1.71.6

771

குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந்
தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவணக்கீளர்
எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறிக்
கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே.                                                   1.71.7

772

கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை
வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்துமனமொன்றி
உரையார்கீதம் பாடநல்ல வுலப்பிலருள்செய்தார்
திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச்சரத்தாரே.                                                   1.71.8

773

நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார்மனத்தாராய்
அடியாரவரும் அருமாமறையும் அண்டத்தமரரும்
முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வாஅருளென்ன
செடியார்செந்நெல் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.                                                   1.71.9

774

நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார்
ஒன்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட்டுழல்வீர்காள்
கன்றுண்பயப்பா லுண்ணமுலையில் கபாலமயல்பொழியச்
சென்றுண்டார்ந்து சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.                                                  1.71.10

775

குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ்சுரபுன்னை
செயிலார்பொய்கை சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரை
மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்குசம்பந்தன்
பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவநாசமே.                                                     1.71.11

திருச்சிற்றம்பலம்