சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.72 திருக்குடந்தைக்காரோணம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சோமநாதர், தேவியார் – தேனார்மொழியம்மை.

பண் – தக்கேசி

776

வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றிஒற்றைக்கண்
கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன்குடமூக்கிற்
காரார்கண்டத் தெண்டோ ளெந்தை காரோணத்தாரே.-1.72.1

777

முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும்மேத்தும்
படியார்பவள வாயார்பலரும் பரவிப்பணிந்தேத்தக்
கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக்குழகாருங்
கடியார்சோலைக் கலவமயிலார் காரோணத்தாரே.-1.72.2

778

மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங்
குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கின்
முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவாமதியினார்
கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே.-1.72.3

779

போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ்வழகாருந்
தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண்குடமூக்கின்
மாதார்மங்கை பாகமாக மனைகள்பலிதேர்வார்
காதார்குழையர் காளகண்டர் காரோணத்தாரே.-1.72.4

780

பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந்
தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக்
கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை
காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே.-1.72.5

781

மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னேஅனல்வாளி
கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர்குடமூக்கில்
தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள்நலியாமைக்
காப்பார்காலன் அடையாவண்ணங் காரோணத்தாரே.-1.72.6

782

ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல்வாழ்க்கை
மானார்தோலார் புலியினுடையார் கரியினுரிபோர்வை
தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங்குடமூக்கிற்
கானார்நட்டம் உடையார்செல்வக் காரோணத்தாரே.-1.72.7

783

வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்பமலைசேரும்
விரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்துசிரம்பத்தும்
உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள்கொடுத்தாருங்
கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோணத்தாரே.-1.72.8

784

கரியமாலுஞ் செய்யபூமேல் அயனுங்கழறிப்போய்
அரியவண்டந் தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார்
தெரியவரிய தேவர்செல்வந் திகழுங்குடமூக்கிற்
கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே.-1.72.9

785

நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள்
பேணார்தூய்மை மாசுகழியார் பேசேலவரோடுஞ்
சேணார்மதிதோய் மாடமல்கு செல்வநெடுவீதிக்
கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோணத்தாரே.-1.72.10

786

கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத்
திருவார்செல்வம் மல்குசண்பைத் திகழுஞ்சம்பந்தன்
உருவார்செஞ்சொல் மாலையிவைபத் துரைப்பாருலகத்துக்
கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலைகழிவாரே.-1.72.11

திருச்சிற்றம்பலம்