சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.78 திருஇடைச்சுரம்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – இடைச்சுரநாதர், தேவியார் – இமயமடக்கொடியம்மை.

பண் – குறிஞ்சி

842

வரிவள ரவிரொளி யரவரை தாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக் கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இனமயி லால வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.-1.78.1

843

ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர் அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர் நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.-1.78.2

844

கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங் காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
வானமும் நிலமையும் இருமையு மானார் வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.-1.78.3

845

கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார் காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர் வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குருந் தேறி வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.-1.78.4

844

கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக் கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர் நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ் செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.-1.78.5

845

தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர் சுடலையி னாடுவர் தோலுடை யாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர் பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.-1.78.6

846

கழல்மல்கு காலினர் வேலினர் நூலர் கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம் மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.-1.78.7

847

தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார் திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி வேறுமோர் சரிதையர் வேடமு முடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித் தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.-1.78.8

850

பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர் பலபுக ழல்லது பழியிலர் தாமுந்
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன் தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.-1.78.9

851

பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும் அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக் கயலினம் வயலிள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.-1.78.10

852

மடைச்சுர மறிவன வாளையுங் கயலும் மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல் சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல் புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுர மேத்திய இசையொடு பாடல் இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.-1.78.11

திருச்சிற்றம்பலம்