சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை
136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்
1.79 திருக்கழுமலம்
திருக்கழுமலம் என்பதும் சீகாழிக்கொருபெயர். வீழிமிழலையில் சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை
பண் – குறிஞ்சி
853
அயிலுறு படையினர் விடையினர் முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்
மயிலுறு சாயல் வனமுலை யொருபால் மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்
பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப் பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர்
கயிலையும் பொதியிலும் இடமென வுடையார் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.-1.79.1
854
கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர் கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்
பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும் படர்சடை யடிகளார் பதியத னயலே
வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும் மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்
கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.-1.792
855
எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம் எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம் வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர்
பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர் பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட
கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.-1.79.3
856
எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர் ஏறுகந் தேறுவர் நீறுமெய் பூசித்
திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள் தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி
வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.-1.79.4
857
ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்
பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற் படஅர வாமையக் கணிந்தவர்க் கிடமாம்
நீரெதிர்ந் திழிமணி நித்தில முத்தம் நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றிக்
காரெதிர்ந் தோதம்வன் திரைகரைக் கெற்றுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.-1.79.5
858
முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி முடியுடை அமரர்கள் அடிபணிந் தேத்தப்
பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த பேரரு ளாளனார் பேணிய கோயில்
பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ் சாந்தமு மேந்திய கையின ராகிக்
கன்னியர் நாடொறும் வேடமே பரவுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.-1.79.6
859
கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார் குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்
நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம் நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்
மலைக்கணித் தாவர வன்றிரை முரல மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக்
கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.-1.79.7
860
புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன் பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோ ள்
பயம்பல படவடர்த் தருளிய பெருமான் பரிவொடு மினிதுறை கோயில தாகும்
வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும் வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்
கயம்பல படக்கடற் றிரைகரைக் கெற்றுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.-1.79.8
861
விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும் வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்
பலங்களால் நேடியும் அறிவரி தாய பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்
மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும் மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து
கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.-1.79.9
862
ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும் அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்
நோம்பல தவமறி யாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச்
சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத் தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்
காம்பன தோளியொ டினிதுறை கோயில் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.-1.79.10
863
கலிகெழு பாரிடை யூரென வுளதாங் கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்
வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர் வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும் உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்
மெலிகெழு துயரடை யாவினை சிந்தும் விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே.-1.79.11
திருச்சிற்றம்பலம்