சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.87 திருவடுகூர்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வடுகேசுவரர், தேவியார் – வடுவகிர்க்கண்ணியம்மை.

பண் – குறிஞ்சி

937

சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்
கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே.-1.87.1

938

பாலு நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி
ஏலுஞ் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக்
கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே.-1.87.2

939

சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதன்மேல்
ஓடுங் களியானை உரிபோர்த் துமையஞ்ச
ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு
பாடும் வடுகூரில் ஆடும் மடிகளே.-1.87.3

940

துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம்
கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார்
கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே.-1.87.4

941

துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல்
தணியா அழல்நாகந் தரியா வகைவைத்தார்
பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த
அணியார் வடுகூரில் ஆடும் மடிகளே.-1.87.5

942

தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக்
கிளரும் அரவார்த்துக் கிளரும் முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
ஒளிரும் வடுகூரில் ஆடும் மடிகளே.-1.87.6

943

நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார்
கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் மடிகளே.-1.87.7

944

பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங்
கறையும் வடுகூரில் ஆடும் மடிகளே.-1.87.8

945

சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மு
கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்தெம்மை நன்றும் அருள்செய்வார்
அந்தண் வடுகூரில் ஆடும் மடிகளே.-1.87.9

946

திருமா லடிவீழத் திசைநான் முகனாய
பெருமா னுணர்கில்லாப் பெருமான் நெடுமுடிசேர்
செருமால் விடையூருஞ் செம்மான் திசைவில்லா
அருமா வடுகூரில் ஆடும் மடிகளே.-1.87.10

947

படிநோன் பவையாவர் பழியில் புகழான
கடிநாண் நிகழ்சோலை கமழும் வடுகூரைப்
படியா னசிந்தை மொழியார் சம்பந்தன்
அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே.-1.87.11

திருச்சிற்றம்பலம்