சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை
136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்
1.96 திருஅன்னியூர் – திருவிருக்குக்குறள்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஆபத்சகாயர், தேவியார் – பெரியநாயகியம்மை.
பண் – குறிஞ்சி
1036
மன்னி யூரிறை, சென்னி யார்பிறை
அன்னி யூரமர், மன்னு சோதியே.-1.96.1
1037
பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க்
குழகன் சேவடி, தொழுது வாழ்மினே.-1.96.2
1038
நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச்
சோதி நாமமே, ஓதி உய்ம்மினே.-1.96.3
1039
பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச்
சித்தர் தாள்தொழ, முத்த ராவரே.-1.96.4
1040
நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர்
மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே.-1.96.5
1041
இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னியூர்
நன்பொ னென்னுமின், உம்ப ராகவே.-1.96.6
1042
அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர்
எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே.-1.96.7
1043
தூர்த்த னைச்செற்ற, தீர்த்தன் அன்னியூர்
ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே.-1.96.8
1044
இருவர் நாடிய, அரவன் அன்னியூர்
பரவுவார் விண்ணுக், கொருவ ராவரே.-1.96.9
1045
குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த்
தொண்டு ளார்வினை, விண்டு போகுமே.-1.96.10
1046
பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால்
வேந்தன் அன்னியூர், சேர்ந்து வாழ்மினே.-1.96.11
திருச்சிற்றம்பலம்