சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்
2.037 திருமறைக்காடு – கதவடைக்கப்பாடியபதிகம்
பண் – இந்தளம்
393
சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.
394
சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
மங்கை உமைபா கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே லடைவித்த கருத்தே.
395
குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல்
மருவும் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ டடைவித்த லழகே.
396
படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்
மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
உடலம் முமைபங்க மதாகியு மென்கொல்
கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே.
397
வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
ஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல்
கானார் கடுவே டுவனான கருத்தே.
398
பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா
உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்
தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.
399
வேலா வலயத் தயலே மிளிர்வெய்துஞ்
சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா
மாலோ டயன்இந் திரனஞ்ச முன்னென்கொல்
காலார் சிலைக்கா மனைக்காய்ந்த கருத்தே.
400
கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல்
வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா
இலங்கை யுடையான் அடர்ப்பட் டிடரெய்த
அலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே.
401
கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றுந்
தேனம் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா
ஏனங் கழுகா னவருன்னை முன்னென்கொல்
வானந் தலமண்டி யுங்கண்டி லாவாறே.
402
வேதம் பலவோமம் வியந்தடி போற்ற
ஓதம் உலவும் மறைக்காட்டி லுறைவாய்
ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்
ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே.
403
காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்
வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த
ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்
வாழி யுலகோர் தொழவான் அடைவாரே.
திருச்சிற்றம்பலம்