சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.041 திருச்சாய்க்காடு

பண் – சீகாமரம்

437

மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்
கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.  01

438  

போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்
வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.  02

439

நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.  03

440

கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே.  04

441

கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பால்மதியந்
தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்
ஓங்கினார் ஓங்கினா ரெனவுரைக்கும் உலகமே.  05

442  

சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்
தீந்தாகம் எரிகொளுவச் செற்றுகந்தான் திருமுடிமேல்
ஓய்ந்தார மதிசூடி ஒளிதிகழும் மலைமகள்தோள்
தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே.  06

443

மங்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதி
சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டி னிசைபாடு மலர்க்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே.  07

444  

தொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ணப்
படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்
தடவரையால் தடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை
இடவகையா லடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே.  08

445  

வையநீ ரேற்றானும் மலருறையும் நான்முகனும்
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமை
தையலார் பாட்டோ வாச் சாய்க்காட்டெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே.  09

446

குறங்காட்டு நால்விரற் கோவணத்துக் கோலோவிப்போய்
அறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர்தூற்றுந்
திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.  10

447

நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழிச்
சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
எம்பந்த மெனக்கருதி ஏத்துவார்க் கிடர்கெடுமே.  11

திருச்சிற்றம்பலம்