சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.062 திருமீயச்சூர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – முயற்சிநாதேசுவரர், தேவியார் – சுந்தரநாயகியம்மை.


பண் – காந்தாரம்

666

காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன்
மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.  01

667

பூவார் சடையின் முடிமேற் புனலர் அனல்கொள்வர்
நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி
ஏவார் மலையே சிலையாக் கழியம் பெரிவாங்கி
மேவார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.  02

668

பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
மின்னேர் சடைக ளுடையான் மீயச் சூரானைத்
தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்க்
கன்னே ரிமையோர் உலக மெய்தற் கரிதன்றே.  03

669

வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்துப்
பாகம் உமையோ டாகப் படிதம் பலபாட
நாகம் அரைமே லசைத்து நடமா டியநம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.  04

670

விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்
படையார் பூதஞ் சூழப் பாட லாடலார்
பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார்
விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே.  05

671

குளிருஞ் சடைகொள் முடிமேற் கோல மார்கொன்றை
ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன்
மிளிரும் மரவம் உடையான் மீயச் சூரானே.  06

672

நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்
கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார்
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே.  07

673

புலியின் உரிதோ லாடை பூசும் பொடிநீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தார் உமையஞ்ச
வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே.  08

674

காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார்
போதி லவனும் மாலுந் தொழப் பொங் கெரியானார்
கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.  09

675

கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக்
கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார்
பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லால்
விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.  10

676

வேட முடைய பெருமா னுறையும் மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்
பாட லாய தமிழீ ரைந்தும் மொழிந்துள்கி
ஆடும் அடியார் அகல்வா னுலகம் அடைவாரே.  11

திருச்சிற்றம்பலம்