சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.07 திருவாஞ்சியம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வாஞ்சியநாதர், தேவியார் – வாழவந்தநாயகியம்மை.

பண்இந்தளம்

67

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.-01

68

கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்
மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்
மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்
ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே.-02

69

மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்
நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்
தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்
பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.-03

70

சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே
சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை
சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்
ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே.-04

71

கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்
செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சியத்
தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே.-05

72

அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்
இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே
பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்
மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே.-06

73

விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே
கண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார்
பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சியத்
தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே.-07

74

மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்
வாடி யூடவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்
வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.-08

75

செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை
கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்
நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத்
தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.-09

76

பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்
மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை
வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத்
தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே.-10

77 தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்
தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால்
நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்
ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.-11

திருச்சிற்றம்பலம்