சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.072 திருநணா


இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. இது பவானி நதி காவிரியுடன் சேருமிடமாதலால், பவானிகூடலெனப்
பெயர் வழங்கப்படுகின்றது.
சுவாமிபெயர் – சங்கமுகநாதேசுவரர், தேவியார் – வேதமங்கையம்மை.


பண் – காந்தாரம்

776

பந்தார் விரல்மடவாள் பாகமா நாகம்பூண் டேற தேறி
அந்தார் அரவணிந்த அம்மா னிடம்போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டு பாடச்
செந்தேன் தெளியொளிரத் தேமாக் கனியுதிர்க்குந் திருந ணாவே.  01

777

நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை வீணை யேந்தி
ஈட்டுந் துயரறுக்கும் எம்மா னிடம்போலு மிலைசூழ் கானில்
ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூ ழோசைச்
சேட்டார் மணிகள் அணியுந் திரைசேர்க்குந் திருந ணாவே.  02

778

நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞால மேத்த
மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க் கிடம்போலும் விரைசூழ் வெற்பில்
குன்றோங்கி வன்றிரைகள் மோத மயிலாலுஞ் சாரற் செவ்வி
சென்றோங்கி வானவர்க ளேத்தி அடிபணியுந் திருந ணாவே.  03

779

கையில் மழுவேந்திக் காலிற் சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு
மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க் கிடம்போலு மிடைந்து வானோர்
ஐய ரவரெம் பெருமா னருளென்றென் றாத ரிக்கச்
செய்ய கமலம் பொழிதே னளித்தியலுந் திருந ணாவே.  04

780

முத்தேர் நகையா ளிடமாகத் தம்மார்பில் வெண்ணூல் பூண்டு
தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த
அத்தேன் அளியுண் களியா லிசைமுரல ஆலத் தும்பி
தெத்தே யெனமுரலக் கேட்டார் வினைகெடுக்குந் திருந ணாவே.  05

781

வில்லார் வரையாக மாநாகம் நாணாக வேடங் கொண்டு
புல்லார் புரமூன் றெரித்தார்க் கிடம்போலும் புலியு மானும்
அல்லாத சாதிகளு மங்கழல்மேற் கைகூப்ப அடியார் கூடிச்
செல்லா வருநெறிக்கே செல்ல அருள்புரியுந் திருந ணாவே.  06

782

கானார் களிற்றுரிவை மேல்மூடி ஆடரவொன் றரைமேற் சாத்தி
ஊனார் தலையோட்டி லூணுகந்தான் றானுகந்த கோயி லெங்கும்
நானா விதத்தால் விரதிகள்நன் னாமமே யேத்தி வாழ்த்தத்
தேனார் மலர்கொண் டடியார் அடிவணங்குந் திருந ணாவே.  07

783

மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலா லூன்றி
முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க் கிடம்போலும் முநனைசேர் சீயம்
அன்னீர் மைகுன்றி அழலால் விழிகுறைய வழியு முன்றில்
செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருந ணாவே.  08

784

மையார் மணிமிடறன் மங்கையோர் பங்குடையான் மனைக டோ றும்
கையார் பலியேற்ற கள்வன் இடம்போலுங் கழல்கள் நேடிப்
பொய்யா மறையானும் பூமி யளந்தானும் போற்ற மன்னிச்
செய்யார் எரியாம் உருவ முறவணங்குந் திருந ணாவே.  09

785

ஆடை யொழித்தங் கமணே திரிந்துண்பார் அல்லல் பேசி
மூடு உருவம் உகந்தார் உரையகற்றும் மூர்த்தி கோயில்
ஓடு நதிசேரும் நித்திலமும் மொய்த்தகிலுங் கரையில் சாரச்
சேடர் சிறந்தேத்தத் தோன்றி யொளிபெருகுந் திருந ணாவே.  10

786

கல்வித் தகத்தால் திரைசூழ் கடற்காழிக் கவுணி சீரார்
நல்வித் தகத்தால் இனிதுணரும் ஞானசம் பந்தன் எண்ணுஞ்
சொல்வித் தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல்
வல்வித் தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின் மேலே.  11

திருச்சிற்றம்பலம்