சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.079 திருவாரூர்


பண் – காந்தாரம்
855

கவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு
சிவனதாட் சிந்தியாப் பேதைமார் போலநீ வெள்கி னாயே
கவனமாய்ப் பாய்வதோர் ஏறுகந் தேறிய காள கண்டன்
அவனதா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.  01

856

தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியால் ஏழை நெஞ்சே
அந்தணா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.  02

857

நிணங்குடர் தோல்நரம் பென்புசேர் ஆக்கைதான் நிலாய தன்றால்
குணங்களார்க் கல்லது குற்றம்நீங் காதெனக் குலுங்கி னாயே
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனங்கொ டேத்தும்
அணங்கனா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.  03

858

நீதியால் வாழ்கிலை நாள்செலா நின்றன நித்த நோய்கள்
வாதியா ஆதலால் நாளும்நாள் இன்பமே மருவி னாயே
சாதியார் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண்
ஆதியா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.  04

859

பிறவியால் வருவன கேடுள ஆதலாற் பெரிய இன்பத்
துறவியார்க் கல்லது துன்பம்நீங் காதெனத் தூங்கி னாயே
மறவல்நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவனா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.  05

860

செடிகொள்நோ யாக்கையம் பாம்பின்வாய்த் தேரையாய்ச் சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.  06

861

ஏறுமால் யானையே சிவிகையந் தளகமீச் சேர்ப்பி வட்டில்
மாறிவா ழுடம்பினார் படுவதோர் நடலைக்கு மயங்கி னாயே
மாறிலா வனமுலை மங்கையோர் பங்கினர் மதியம் வைத்த
ஆறனா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.  07

862

என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந் திதுநம் இல்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல் லாமையான் முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கி டாதே
அன்பனா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.  08

863

தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தார மென்னும்
பந்தம்நீங் காதவர்க் குய்ந்துபோக் கில்லெனப் பற்றி னாயே
வெந்தநீ றாடியார் ஆதியார் சோதியார் வேத கீதர்
எந்தையா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.  09

864

நெடியமால் பிரமனும் நீண்டுமண் ணிடந்தின்னம் நேடிக் காணாப்
படியனார் பவளம்போல் உருவனார் பனிவளர் மலையாள் பாக
வடிவனார் மதிபொதி சடையனார் மணியணி கண்டத் தெண்டோ ள்
அடிகளா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண் டஞ்சல் நெஞ்சே.  10

865

பல்லிதழ் மாதவி அல்லிவண் டியாழ்செயுங் காழி யூரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம் பந்தன் ஆரூர்
எல்லியம் போதெரி யாடுமெம் மீசனை யேத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீதிலார் ஓதநீர் வைய கத்தே.  11

திருச்சிற்றம்பலம்