சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்
2.08 திருச்சிக்கல்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நவநீதநாதர், தேவியார் – வேனெடுங்கண்ணியம்மை.
பண் – இந்தளம்
78
வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகை
தேனுலா வுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்
வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி
ஞானமா கநினை வார்வினை யாயின நையுமே.-01
79
மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே
அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.-02
80
நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய
சேலு மாலுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்
பால வண்ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.-03
81
கந்தமுந் தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற்
செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்
வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்
சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.-04
82
மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு
தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்
வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே
தங்கு மேற்சர தந்திரு நாளுந்த கையுமே.-05
83
வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்
தெண்டிரைக் கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கலுள்
விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப்பி ரானடி
கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.-06
84
முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழத்
துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்
செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே.-07
85
தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே
செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே.-08
86
மாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங்
கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியுஞ்
சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்
பாலும் பன்மலர் தூவப் பறையும்நம் பாவமே.-09
87
பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக்
கட்ட மண்கழுக் கள்சொல்லி னைக்கரு தாதுநீர்
சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப்
பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே.-10
88
கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல்
செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
வெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே.-11
திருச்சிற்றம்பலம்