சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்
2.084 திருநனிபள்ளி
பண் – பியந்தைக்காந்தாரம்
908
காரைகள் கூகைமுல்லை களவாகை ஈகை படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகா டமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வார வயன்மேதி வைகும் நனிபள்ளி போலு நமர்காள். 01
909
சடையிடை புக்கொடுங்கி உளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணி அயலே
இடையிடை வைத்ததொக்கும் மலர்தொத்து மாலை யிறைவன்னி டங்கொள் பதிதான்
மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து மணநாறும் நீல மலரும்
நடையுடை அன்னம்வைகு புனலம் படப்பை நனிபள்ளி போலு நமர்காள். 02
910
பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடி லாத பெருமான்
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை யிடமாய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் விடுபோ தலர்ந்த விரைசூழ்
நறுமலர் அல்லிபல்லி ஒலிவண் டுறங்கும் நனிபள்ளி போலு நமர்காள். 03
911
குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு தலைமாலை யோடு குலவி
ஒளிர்தரு திங்கள்சூடி உமைபாக மாக வுடையா னுகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட பெடைவண்டு தானும் முரல
நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகும் நனிபள்ளி போலு நமர்காள். 04
912
தோடொரு காதனாகி யொருகா திலங்கு சுரிசங்கு நின்று புரளக்
காடிட மாகநின்று கனலாடு மெந்தை யிடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுட னாடுசெம்மை ஒளிவெள்ள மாரும் நனிபள்ளி போலு நமர்காள். 05
913
மேகமொ டோ டுதிங்கள் மலரா அணிந்து மலையான் மடந்தை மணிபொன்
ஆகமோர் பாகமாக அனலாடு மெந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமோ டாடுமந்தி உகளுஞ் சிலம்ப அகிலுந்தி யொண்பொன் இடறி
நாகமோ டாரம்வாரு புனல்வந் தலைக்கும் நனிபள்ளி போலு நகர்காள். 06
914
தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டி வீணை முரல
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலு நமர்காள். 07
915
வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று மதியா அரக்கன் வலியோ
டுலமிகு தோள்கள்ஒல்க விரலா லடர்த்த பெருமான் உகந்த நகர்தான்
நிலமிகு கீழுமேலும் நிகராது மில்லை எனநின்ற நீதி யதனை
நலம்மிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் நனிபள்ளி போலு நமர்காள். 08
916
நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாச நாறும் நனிபள்ளி போலு நமர்காள். 09
917
அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் இடவுண்டு பட்ட அமணும்
மனமிகு கஞ்சிமண்டை அதிலுண்டு தொண்டர் குணமின்றி நின்ற வடிவும்
வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் விடையா னுகந்த நகர்தான்
நனிமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் நனிபள்ளி போலு நமர்காள். 10
918
கடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி என்று கருத
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி னிசையா லுரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினைகெடுதல் ஆணை நமதே. 11
திருச்சிற்றம்பலம்