சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்
2.088 திருமுல்லைவாயில்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – முல்லைவனநாதர், தேவியார் – கோதையம்மை.
பண் – பியந்தைக்காந்தாரம்
952
துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்
ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த உமைபங்க னெங்க ளரனூர்
களிமண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவின்
தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு திருமுல்லை வாயி லிதுவே. 01
953
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனைப் படைத்த பரமன்
அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு மரவிக்க நின்ற அரனூர்
உருவத்தின் மிக்க ஒளிர்சங் கொடிப்பி யவையோத மோத வெருவித்
தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள் திருமுல்லை வாயி லிதுவே. 02
954
வாராத நாடன் வருவார்தம் வில்லின் உருமெல்கி நாளு முருகில்
ஆராத வின்ப னகலாத அன்பன் அருள்மேவி நின்ற அரனூர்
பேராத சோதி பிரியாத மார்பின் அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காதல் நெதிநேர நீடு திருமுல்லை வாயி லிதுவே. 03
955
ஒன்றொன்றொ டொன்றும் ஒருநான்கொ டைந்தும் இருமூன்றொ டேழு முடனாய்
அன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும் அறியாமை நின்ற அரனூர்
குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று கொடியொன்றொ டொன்று குழுமிச்
சென்றொன்றொ டொன்று செறிவாய் நிறைந்த திருமுல்லை வாயி லிதுவே. 04
956
கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன் விடைநாளும் ஏறு குழகன்
நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின் மதியேறு சென்னி அரனூர்
அம்பன்ன வொண்க ணவரா டரங்கின் அணிகோபு ரங்க ளழகார்
செம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு திருமுல்லை வாயி லிதுவே. 05
957
ஊனேறு வேலின் உருவேறு கண்ணி ஒளியேறு கொண்ட வொருவன்
ஆனேற தேறி யழகேறு நீறன் அரவேறு பூணு மரனூர்
மானேறு கொல்லை மயிலேறி வந்து குயிலேறு சோலை மருவி
தேனேறு மாவின் வளமேறி யாடு திருமுல்லை வாயி லிதுவே. 06
958
நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன் அனலாடு மேனி யரனூர்
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம் உளதென்று வைகி வரினுஞ்
செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள் திருமுல்லை வாயி லிதுவே. 07
959
வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன் முடிபத்து மிற்று நெரிய
உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமைபங்கன் எங்க ளரனூர்
வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறிதேற லாடு திருமுல்லை வாயி லிதுவே. 08
960
மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானு முன்னி யவர்தேட நின்ற பரனூர்
காலாடு நீல மலர்துன்றி நின்ற கதிரேறு செந்நெல் வயலிற்
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு திருமுல்லை வாயி லிதுவே. 09
961
பனைமல்கு திண்கை மதமா வுரித்த பரமன்ன நம்ப னடியே
நினைவன்ன சிந்தை அடையாத தேரர் அமண்மாய நின்ற அரனூர்
வனமல்கு கைதை வகுளங்க ளெங்கு முகுளங்க ளெங்கு நெரியச்
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு திருமுல்லை வாயி லிதுவே. 10
962
அணிகொண்ட கோதை யவள்நன்று மேத்த அருள்செய்த எந்தை மருவார்
திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி திருமுல்லை வாயி லிதன்மேல்
தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான மிகுபந்தன் ஒண்டமிழ் களின்
அணிகொண்ட பத்தும் இசைபாடு பத்தர் அகல்வானம் ஆள்வர் மிகவே. 11
திருச்சிற்றம்பலம்