சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.09 திருமழபாடி

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வச்சிரத்தம்பேசுவரர், தேவியார் – அழகாம்பிகையம்மை.

பண் – இந்தளம்
89

களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்
டளையுங் கொன்றையந் தார்மழ பாடியுள் அண்ணலே.-01

90

காச்சி லாதபொன் நோக்குங் கனவயி ரத்திரள்
ஆச்சி லாதப ளிங்கினன் அஞ்சுமுன் ஆடினான்
பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே.-02

91

உரங்கெ டுப்பவன் உம்பர்க ளாயவர் தங்களைப்
பரங்கெ டுப்பவன் நஞ்சையுண் டுபக லோன்றனை
முரண்கெ டுப்பவன் முப்புரந் தீயெழச் செற்றுமுன்
வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே.-03

92

பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்
வெள்ளம் ஆதரித் தான்விடை யேறிய வேதியன்
வள்ளல் மாமழ பாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரி மின்வினை யாயின ஓயவே.-04

93

தேனு லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள்
பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன்
வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங்
கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே.-05

94

தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப்
புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே.-06

95

சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை
எந்தை யான்இமை யாதமுக் கண்ணினன் எம்பிரான்
மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச்
சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே.-07

96

இரக்க மொன்றுமி லான்இறை யான்திரு மாமலை
உரக்கை யாலெடுத் தான்றன தொண்முடி பத்திற
விரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன்
வரத்தை யேகொடுக் கும்மழ பாடியுள் வள்ளலே.-08

97

ஆலம் உண்டமு தம்மம ரர்க்கருள் அண்ணலார்
காலன் ஆருயிர் வீட்டிய மாமணி கண்டனார்
சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விடம்
மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே.-09

98

கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும்
நலியும் நாள்கெடுத் தாண்டஎன் நாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும்
மலியும் மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே.-10

99

மலியு மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
கலிசெய் மாமதில் சூழ்கடற் காழிக் கவுணியன்
ஒலிசெய் பாடல்கள் பத்திவை வல்லார்…….உலகத்திலே.-11

திருச்சிற்றம்பலம்