சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.102 திருச்சிரபுரம்


பண் – நட்டராகம்
1103

அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை அமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர் வைத்தவர் வேதந்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற் சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே.  01

1104

கோல மாகரி உரித்தவர் அரவொடும் ஏனக்கொம் பிளஆமை
சாலப் பூண்டுதண் மதியது சூடிய சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர் பொருகடல் விடமுண்ட
நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந் தொழவினை நில்லாவே.  02

1105

மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவங்கெட மதித்தன்று
கானத் தேதிரி வேடனா யமர்செயக் கண்டருள் புரிந்தார்பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ் சிரபுரத் துறையெங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை குற்றங்கள் குறுகாவே.  03

1106

மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக் காலனை உதைசெய்தார்
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப் பிணக்கறுத் தருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச் சிரபுரத் தமர்கின்ற
ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க் கருவினை யடையாவே.  04

1107

பாரும் நீரொடு பல்கதிர் இரவியும் பனிமதி ஆகாசம்
ஓரும் வாயுவும் ஒண்கனல் வேள்வியில் தலைவனு மாய்நின்றார்
சேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி செழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழும் அடியவர் வருந்தாரே.  05

1108

ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ் வுலகங்க ளவைமூட
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக அந்தரத் துயர்ந்தார்தாம்
யாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை இன்பன்எம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ வல்வினை அடையாவே.  06

1109

பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய பிணமிடு சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம் ஆடும்வித் தகனாரொண்
சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர் தகுசிர புரத்தார்தாந்
தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத் தொழுமவர் தளராரே.  07

1110

இலங்கு பூண்வரை மார்புடை இராவணன் எழில்கொள்வெற் பெடுத்தன்று
கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி நெரியவைத் தருள்செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன் றதனிடைப் புகுந்தாருங்
குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு தெழவினை குறுகாவே.  08

1111

வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன் மாயனென் றிவரன்று
கண்டு கொள்ளவோர் ஏனமோ டன்னமாய்க் கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே நீண்டவெம் பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ வினையவை கூடாவே.  09

1112

பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும் பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத் தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியில் மூழ்கிட இளவாளை
வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை விட்டிடும் மிகத்தானே.  10

1113

பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப் பையர வோடக்கு
நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே.  11

திருச்சிற்றம்பலம்