சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.104 திருக்கடிக்குளம்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கற்பகேசுவரர், தேவியார் – சவுந்தரநாயகியம்மை.


பண் – நட்டராகம்

1125

பொடிகொள் மேனிவெண் ணூலினர் தோலினர் புலியுரி யதளாடை
கொடிகொள் ஏற்றினர் மணிகிணின் எனவரு குரைகழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தைத்தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே.  01

1126

விண்க ளார்தொழும் விளக்கினை துளக்கிலா விகிர்தனை விழவாரும்
மண்க ளார்துதித் தன்பராய் இன்புறும் வள்ளலை மருவித்தங்
கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத் துறைதரு கற்பகத்தைப்
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே.  02

1127

பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது புலியதள் அழல்நாகந்
தங்க மங்கையைப் பாகம துடையவர் தழல்புரை திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத் துறைதரு கற்பகத்தை
எங்கு மேத்திநின் றின்புறும் அடியரை இடும்பைவந் தடையாவே.  03

1128

நீர்கொள் நீள்சடை முடியனை நித்திலத் தொத்தினை நிகரில்லாப்
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பாருங்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகந்தன்னைச்
சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை தேய்வது திணமாமே.  04

1129

சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு துன்னிய தழல்நாகம்
அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல கொண்டடி யவர்போற்றக்
கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத் துறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்கையோ டுளமகிழ்ந் துரைப்பவர் விதியுடை யவர்தாமே.  05

1130

மாதி லங்கிய பாகத்தன் மதியமொ டலைபுனல் அழல்நாகம்
போதி லங்கிய கொன்றையும் மத்தமும் புரிசடைக் கழகாகக்
காதி லங்கிய குழையினன் கடிக்குளத் துறைதரு கற்பகத்தின்
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை பற்றறக் கெடுமன்றே.  06

1131

குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் குழாம்பல குளிர்பொய்கை
உலவு புள்ளினம் அன்னங்கள் ஆலிடும் பூவைசே ருங்கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத் துறையுங்கற் பகத்தைச்சீர்
நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை நிற்ககில் லாதானே.  07

1132

மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேல் மதியிலா மையிலோடி
எடுத்த லும்முடி தோள்கரம் நெரிந்திற இறையவன் விரலூன்றக்
கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக் கடிக்குளந் தனில்மேவிக்
கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார் குணமுடை யவர்தாமே.  08

1133

நீரி னார்கடல் துயின்றவன் அயனொடு நிகழடி முடிகாணார்
பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர் பவளத்தின் படியாகிக்
காரி னார்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தின்றன்
சீரி னார்கழ லேத்தவல் லார்களைத் தீவினை யடையாவே.  09

1134

குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங் குறியினில் நெறிநில்லா
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக் கொள்ளன்மின் விடமுண்ட
கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத் துறைதரும் எம்மீசர்
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் தூநெறி எளிதாமே.  10

1135

தனம லிபுகழ் தயங்குபூந் தராயவர் மன்னன்நற் சம்பந்தன்
மனம லிபுகழ் வண்டமிழ் மாலைகள் மாலதாய் மகிழ்வோடுங்
கனம லிகட லோதம்வந் துலவிய கடிக்குளத் தமர்வானை
இனம லிந்திசை பாடவல் லார்கள்போய் இறைவனோ டுறைவாரே.  11

திருச்சிற்றம்பலம்