சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.108 திருவிற்குடிவீரட்டானம்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வீரட்டானேசுவரர், தேவியார் – மைவார்குழலியம்மை.


1169

வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை அருவினை யடையாவே. 01

1170

களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங் கடிகமழ் சடைக்கேற்றி
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் பொருகரி யுரிபோர்த்து
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை விற்குடி வீரட்டம்
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார் வருத்தம தறியாரே. 02

1171

கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத் தாடிய வேடத்தர்
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி விற்குடி வீரட்டம்
பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப் பேணுவ ருலகத்தே. 03

1172

பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர் பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு கடலெழு விடமுண்டார்
வேத மோதிய நாவுடை யானிடம் விற்குடி வீரட்டஞ்
சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோ பிணி தீவினை கெடுமாறே. 04

1173

கடிய ஏற்றினர் கனலன மேனியர் அனலெழ வூர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்றன தடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினாற் பற்றறும் அருநோயே. 05

1174

பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக் கையினர் மெய்யார்ந்த
அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர் அரியவர் அல்லார்க்கு
விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக் கிடர்கள்வந் தடையாவே. 06

இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07

1175

இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை யிகலழி தரவூன்று
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு பொருளினன் இருளார்ந்த
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி விற்குடி வீரட்டந்
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத் துன்பநோ யடையாவே. 08

1176

செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந் திருவடி யறியாமை
எங்கு மாரெரி யாகிய இறைவனை யறைபுனல் முடியார்ந்த
வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன் விற்குடி வீரட்டந்
தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர் தவமல்கு குணத்தாரே. 09

1177

பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ ராடைய ரவர்வார்த்தை
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின் பரிவுறு வீர்கேண்மின்
விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில் விற்குடி வீரட்டங்
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர் கருத்துறுங் குணத்தாரே. 10

1178

விலங்க லேசிலை யிடமென வுடையவன் விற்குடி வீரட்டத்
திலங்கு சோதியை எம்பெரு மான்றனை யெழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம் பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால் மற்றது வரமாமே. 11

திருச்சிற்றம்பலம்