சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்
2.21 திருக்கழிப்பாலை
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பால்வண்ணநாதர், தேவியார் – வேதநாயகியம்மை.
பண் – இந்தளம்
219
புனலா டியபுன் சடையாய் அரணம்
அனலா கவிழித் தவனே அழகார்
கனலா டலினாய் கழிப்பா லையுளாய்
உனவார் கழல்கை தொழுதுள் குதுமே. 01
220
துணையா கவொர்தூ வளமா தினையும்
இணையா கவுகந் தவனே இறைவா
கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்
இணையார் கழலேத் தவிடர் கெடுமே. 02
221
நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்
முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்
கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
அடியார்க் கடையா அவலம் மவையே. 03
222
எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ
வளிகா யமென வெளிமன் னியதூ
ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்
களியாய் கழிப்பா லையமர்ந் தவனே. 04
223
நடநண் ணியொர்நா கமசைத் தவனே
விடநண் ணியதூ மிடறா விகிர்தா
கடல்நண் ணுகழிப் பதிகா வலனே
உடன்நண் ணிவணங் குவனுன் னடியே. 05
224
பிறையார் சடையாய் பெரியாய் பெரியம்
மறையார் தருவாய் மையினா யுலகிற்
கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்
இறையார் கழலேத் தவிடர் கெடுமே. 06
225
முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்
கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்
எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்
கதிரும் வினையா யினஆ சறுமே. 07
226
எரியார் கணையால் எயிலெய் தவனே
விரியார் தருவீழ் சடையாய் இரவிற்
கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்
உரிதா கிவணங் குவனுன் னடியே. 08
227
நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்
கனலா னவனே கழிப்பா லையுளாய்
உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்
கிலதாம் வினைதான் எயிலெய் தவனே. 09
228
தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்
துவர்கொண் டனநுண் துகிலா டையரும்
அவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும்
உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே. 10
229
கழியார் பதிகா வலனைப் புகலிப்
பழியா மறைஞா னசம்பந் தனசொல்
வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்
கெழியார் இமையோ ரொடுகே டிலரே. 11
திருச்சிற்றம்பலம்