சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.27 திரு இந்திரநீலப்பருப்பதம்

இத்தலம் வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர் – நீலாசலநாதர், தேவியார் – நீலாம்பிகையம்மை.

பண்இந்தளம்

284

குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்
திலகு மான்மழு வேந்தும் அங்கையன்
நிலவும் இந்திர நீலப் பர்ப்பதத்
துலவி னான்அடி யுள்க நல்குமே.-01

285

குறைவி லார்மதி சூடி யாடவண்
டறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர்
இறைவன் இந்திர நீலப் பர்ப்பதத்
துறைவி னான்றனை யோதி உய்ம்மினே.-02

286

என்பொன் என்மணி யென்ன ஏத்துவார்
நம்பன் நான்மறை பாடு நாவினான்
இன்பன் இந்திர நீலப் பர்ப்பதத்
தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே.-03

287

நாச மாம்வினை நன்மை தான்வருந்
தேச மார்புக ழாய செம்மையெம்
ஈசன் இந்திர நீலப் பர்ப்பதங்
கூசி வாழ்த்துதுங் குணம தாகவே.-04

288

மருவு மான்மட மாதொர் பாகமாய்ப்
பரவு வார்வினை தீர்த்த பண்பினான்
இரவன் இந்திர நீலப் பர்ப்பதத்
தருவி சூடிடும் அடிகள் வண்ணமே.-05

289

வெண்ணி லாமதி சூடும் வேணியன்
எண்ணி லார்மதி லெய்த வில்லினன்
அண்ணல் இந்திர நீலப் பர்ப்பதத்
துண்ணி லாவுறும் ஒருவன் நல்லனே.-06

290

கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர்
பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர்
அடிகள் இந்திர நீலப் பர்ப்பதம்
உடைய வாண ருகந்த கொள்கையே.-07

291

எடுத்த வல்லரக் கன்க ரம்புயம்
அடர்த்த தோர்விர லான வனையாட்
படுத்தன் இந்திர நீலப் பர்ப்பதம்
முடித்த லம்முற முயலும் இன்பமே.-08

292

பூவி னானொடு மாலும் போற்றுறுந்
தேவன் இந்திர நீலப் பர்ப்பதம்
பாவி யாதெழு வாரைத் தம்வினை
கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே.-09

293

கட்டர் குண்டமண் தேரர் சீரிலர்
விட்டர் இந்திர நீலப் பர்ப்பதம்
எட்ட னைநினை யாத தென்கொலோ
சிட்ட தாயுறை யாதி சீர்களே.-10

294

கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான்
இந்தி ரன்தொழு நீலப் பர்பதத்
தந்த மில்லியை யேத்து ஞானசம்
பந்தன் பாடல்கொண் டோ தி வாழ்மினே.-11

திருச்சிற்றம்பலம்