சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பார்வதீசுவரர், தேவியார் – சத்தியம்மாளம்மை.

2.3 திருத்தெளிச்சேரி

பண் – இந்தளம்

22

பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர்
மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே.-2.3.1

23

விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவே
திளைக்குந் தீர்த்த மறாத திகழ்தெளிச் சேரியீர்
வளைக்குந் திண்சிலை மேலைந்து பாணமுந் தானெய்து
களிக்குங் காமனை யெங்ஙனம் நீர்கண்ணிற் காய்ந்ததே.-2.3.2

24

வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
செம்ப டுத்த செழும்புரி சைத்தெளிச் சேரியீர்
கொம்ப டுத்ததொர் கோல விடைமிசை கூர்மையோ
டம்ப டுத்தகண் ணாளொடு மேவல் அழகிதே.-2.3.3

25

காரு லாங்கட லிப்பிகள் முத்தங் கரைப்பெயுந்
தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர்
ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே
வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே.-2.3.4

26

பக்க நுந்தமைப் பார்ப்பதி யேத்திமுன் பாவிக்குஞ்
செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளிச் சேரியீர்
மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே
நக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே.-2.3.5

27

தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநற்
றிவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர்
குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி யெங்ஙனம் நீர்கையிற் காய்ந்ததே.-2.3.6

28

கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடுஞ்
சேட டுத்த தொழிலின் மிகுதெளிச் சேரியீர்
மாட டுத்த மலர்க்கண்ணி னாள்கங்கை நங்கையைத்
தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே.-2.3.7

29

கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச் சேரியீர்
வித்த கப்படை வல்ல அரக்கன் விறற்றலை
பத்தி ரட்டிக் கரம்நெரித் திட்டதும் பாதமே.-2.3.8

30

காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்
சேல டுத்த வயற்பழ னத்தெளிச் சேரியீர்
மால டித்தல மாமல ரான்முடி தேடியே
ஓல மிட்டிட எங்ஙன மோருருக் கொண்டதே.-2.3.9

31

மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர்
செந்தி லங்கு மொழியவர் சேர்தெளிச் சேரியீர்
வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்
தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே.-2.3.10

32

திக்கு லாம்பொழில் சூழ்தெளிச் சேரியெஞ் செல்வனை
மிக்க காழியுள் ஞானசம் பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே.-2.3.11

திருச்சிற்றம்பலம்