சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.5 திருவனேகதங்காபதம்

இத்தலம் வடதேசத்திலுள்ளது.
சுவாமிபெயர் – அருள்மன்னர், தேவியார் – மனோன்மணியம்மை.

பண்இந்தளம்

44

நீடல் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை
சூடல் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல்
ஆடல் மேவுமவர் மேய அனேகதங் காவதம்
பாடல் மேவுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.-2.5.1

45

சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்றன் அனேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர்
கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே.-2.5.2

46

செம்பி னாருமதில் மூன்றெரி யச்சின வாயதோர்
அம்பி னாலெய்தருள் வில்லி யனேகதங் காவதங்
கொம்பின் நேரிடை யாளொடுங் கூடிக்கொல் லேறுடை
நம்பன் நாமநவி லாதன நாவென லாகுமே.-2.5.3

47

தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச்
சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்
அந்த மில்லவள வில்ல அனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே.-2.5.4

48

பிறையு மாசில்கதி ரோனறி யாமைப் பெயர்ந்துபோய்
உறையுங் கோயில்பசும் பொன்னணி யாரசும் பார்புனல்
அறையும் ஓசைபறை போலும் அனேகதங் காவதம்
இறையெம் மீசனெம் மானிட மாகவு கந்ததே.-2.5.5

49

தேனை யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர்
ஆனை யேறுமணி சாரல் அனேகதங் காவதம்
வானை யேறுநெறி சென்றுண ருந்தனை வல்லிரேல்
ஆனை யேறுமுடி யானருள் செய்வதும் வானையே.-2.5.6

50

வெருவி வேழம்இரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங்
குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெள்
ளருவி பாயுமணி சாரல் அனேகதங் காவதம்
மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே.-2.5.7

51

ஈர மேதுமில னாகி யெழுந்த இராவணன்
வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான்
ஆரம் பாம்பதணி வான்றன் அனேகதங் காவதம்
வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே.-2.5.8

52

கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர்க் கையமாய்
எண்ணும் வண்ணமறி யாமையெ ழுந்ததோ ராரழல்
அண்ணல் நண்ணுமணி சாரல் அனேகதங் காவதம்
நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே.-2.5.9

53

மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர்
ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம்
ஆப தம்மறி வீருளி ராகில் அனேகதங்
காப தம்மமர்ந் தான்கழல் சேர்தல் கருமமே.-2.5.10

54

தொல்லை யூழிப்பெயர் தோன்றிய தோணி புரத்திறை
நல்ல கேள்வித்தமிழ் ஞானசம் பந்தன்நல் லார்கள்முன்
அல்லல் தீரவுரை செய்த அனேகதங் காவதஞ்
சொல்ல நல்லஅடை யும்மடை யாசுடு துன்பமே.-2.5.11

திருச்சிற்றம்பலம்