சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய எட்டாம் திருமுறை

திருவாசகம் – திருக்கோவையார்

76 பதிகங்கள் – 1058 பாடல்கள் 


22. கோயில் திருப்பதிகம்


அனுபோக இலக்கணம்
(தில்லையில் அருளியது – எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)


மாறிநின்றென்னை மயங்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி உள்ளவா காணவந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந்துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடை அன்பே. 388

அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை ஆனந்த மாய்க் கசிந்துருக
என்பாம் அல்லா இன்னருள் தந்தாய் யானிதற் கிலனொர்கைம்மாறு
முன்புமாய்ப் பின்னும் முழுதுமாய்ப் பரந்த முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந்துறையாய் சிவபெருமானே சீருடைச் சிவபுரத்தரைசே. 389

அரைசனே அன்பர்க் கடியனே னுடைய அப்பனே ஆவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப் பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே
திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே திருப்பெருந்துறையுறை சிவனே
உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 390

உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார் உணர்வுக்குந் தெரிவரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே
திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே திருப்பெருந்துறையுறை சிவனே
குணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே. 391

குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தேன் மனத்திடை மின்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் இனியுன்னை யென்னிரக் கேனே. 392

இரந்திரந் துருக என்மனத் துள்ளே ஏகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் திருப்பெருந்துறையுறை சிவனே
நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால் ஆயவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் கண்ணுறங் கண்டுகொண்டின்றே. 393

இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளக் தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிது மற்றின்மை
சென்றுசென்றுணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம் திருப்பெருந்துறையுறை சிவனே
ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை யாருன்னை அறியகிற்பாரே. 394

பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே திருப்பெருந்துறையுறை சிவனே
ஆருற வெனக்கிய காரய லுள்ளார் ஆனந்தம் ஆக்குமென் சோதி. 395

சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட்குன்றே திருப்பெருந்துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய் வந்துநின் இணையடி தந்தே. 396

தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே. 397

திருச்சிற்றம்பலம்