சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.006 திருவெண்காடு


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சுவேதாரணியேசுவரர் – தேவியார் – பிரமவித்தியாநாயகியம்மை


பண் – இந்தளம்

052
படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப் பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர் மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.01
053
இழித்து கந்தீர் முன்னை வேடம் இமைய வர்க்கும் உரைகள் பேணா
தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட உயர்த வத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காம வேளை அவனு டைய தாதை காண
விழித்து கந்த வெற்றி யென்னே வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.02
054
படைகள் ஏந்திப் பாரி டமும் பாதம் போற்ற மாதும் நீரும்
உடையோர் கோவ ணத்த ராகி உண்மை சொல்லீர் உம்மை யன்றே
சடைகள் தாழக் கரணம் இட்டுத் தன்மை பேசி இல்ப லிக்கு
விடைய தேறித் திரிவ தென்னே வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.03
055
பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர் பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்
கண்ணு ளீராய்க் கருத்தி லும்மைக் கருது வார்கள் காணும் வண்ணம்
மண்ணு ளீராய் மதியம் வைத்தீர் வான நாடர் மருவி யேத்த
விண்ணு ளீராய் நிற்ப தென்னே வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.04
056
குடமெ டுத்து நீரும் பூவுங் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
நடமெ டுத்தொன் றாடிப் பாடி நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம்
வடமெ டுத்த கொங்கை மாதோர் பாக மாக வார்க டல்வாய்
விடம்மி டற்றில் வைத்த தென்னே வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.05
057
மாறு பட்ட வனத்த கத்தில் மருவ வந்த வன்க ளிற்றைப்
பீறி இட்ட மாகப் போர்த்தீர் பெய்ப லிக்கென் றில்லந் தோறுங்
கூறு பட்ட கொடியும் நீருங் குலாவி ஏற்றை அடர ஏறி
வேறு பட்டுத் திரிவ தென்னே வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.06
058
காத லாலே கருதுந் தொண்டர் கார ணத்தீ ராகி நின்றே
பூதம் பாடப் புரிந்து நட்டம் புவனி யேத்த ஆட வல்லீர்
நீதி யாக ஏழி லோசை நித்த ராகிச் சித்தர் சூழ
வேத மோதித் திரிவ தென்னே வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.07
059
குரவு கொன்றை மதியம் மத்தங் கொங்கை மாதர் கங்கை நாகம்
விரவு கின்ற சடையு டையீர் விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்
பரவும் என்மேல் பழிகள் போக்கீர் பாக மாய மங்கை யஞ்சி
வெருவ வேழஞ் செற்ற தென்னே வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.08
060
மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர் நிச்ச யத்தால் நினைப்பு ளார்பாற்
பாடுங் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ங னேதான்
நாடுங் காட்டில் அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலு மாய
வேடங் காட்டித் திரிவ தென்னே வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.09
061
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ்வெண் காடு மேய
விருத்த னாய வேதன் றன்னை விரிபொ ழிற்றிரு நாவ லூரன்
அருத்தி யாலா ரூரன் தொண்டன் அடியன் கேட்ட மாலை பத்துந்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மை யாளர் வானு ளாரே. 7.6.10

திருச்சிற்றம்பலம்