சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.007 திருஎதிர்கொள்பாடி


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அயிராவதேசுவரர் – தேவியார் – வாசமலர்க்குழன்மாதம்மை.


பண் – இந்தளம்

062
மத்த யானை ஏறி மன்னர் சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 7.7.01
063
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனைவாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர் நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 7.7.02

064
செடிகொ ளாக்கை சென்று சென்று தேய்ந்தொல் லைவீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள் பட்டு மயங்காதே
கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 7.7.03

065
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே
யாவ ராலும் இகழப் பட்டிங் கல்ல லில்வீழாதே
மூவ ராயும் இருவ ராயும் முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 7.7.04

066
அரித்து நம்மேல் ஐவர் வந்திங் காறலைப் பான்பொருட்டாற்
சிரித்த பல்வாய் வெண்ட லைபோய் ஊர்ப்பு றஞ்சேராமுன்
வரிக்கொ டுத்திவ் வாள ரக்கர் வஞ்ச மதில்மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 7.7.05

067
பொய்யர் கண்டீர் வாழ்க்கை யாளர் பொத்தடைப் பான்பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மோ டாடி நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மை யேத்த அம்மை நமக்கருளும்
ஐயர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 7.7.06

068
கூசம் நீக்கிக் குற்றம் நீக்கிச் செற்ற மனம்நீக்கி
வாசம் மல்கு குழலி னார்கள் வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பணிந் தேறேறும்
ஈசர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 7.7.07

069
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்ன மோழை மையான் முட்டை மனத்தீரே
அன்ப ரல்லால் அணிகொள் கொன்றை அடிக ளடிசேரார்
என்பர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 7.7.08

070
தந்தை யாரும் தவ்வை யாரும் எட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோ டுள்ள ளாவி வான நெறிகாட்டுஞ்
சிந்தை யீரே நெஞ்சி னீரே திகழ்மதி யஞ்சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 7.7.09

071
குருதி சோர ஆனையின் றோல் கொண்ட குழற்சடையன்
மருது கீறி ஊடு போன மாலய னும்மறியாச்
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச் சோதியெம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே. 7.7.10

072 முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடை யான்உறையும்
பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப் பரமனை யேபணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் சடைய னவன்சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே. 7.7.11

திருச்சிற்றம்பலம்