சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.8 திருவாரூர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வன்மீகநாதர், தேவியார் – அல்லியங்கோதையம்மை


பண் – இந்தளம்

073
இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு
பறைகிழித் தனைய போர்வை பற்றியான் நோக்கி னேற்குத்
திறைகொணர்ந் தீண்டித் தேவர் செம்பொனும் மணியுந் தூவி
அறைகழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 7.8.1

074
ஊன்மிசை உதிரக் குப்பை ஒருபொரு ளிலாத மாயம்
மான்மறித் தனைய நோக்க மடந்தைமார் மதிக்கு மிந்த
மானுடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
ஆனல்வெள் ளேற்ற ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 7.8.2

075
அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோ டஞ்சு நான்குந்
துறுபறித் தனைய நோக்கிச் சொல்லிற்றொன் றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும் நாடொறும் வணங்கு வார்க்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 7.8.3

076
சொல்லிடில் எல்லை இல்லை சுவையிலாப் பேதை வாழ்வு
நல்லதோர் கூரை புக்கு நலமிக அறிந்தே னல்லேன்
மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி யெங்கும்
அல்லிவண் டியங்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 7.8.4

077
நரம்பினோ டெலும்பு கட்டி நசையினோ டிசைவொன் றில்லாக்
குரம்பைவாய்க் குடியி ருந்து குலத்தினால் வாழ மாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை மாதவித் தொகுதி என்றும்
அரும்புவாய் மலரும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 7.8.5

078
மணமென மகிழ்வர் முன்னே மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணமெனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடைச் சோலை தோறும் பைம்பொழில் விளாகத் தெங்கள்
அணைவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 7.8.6

079
தாழ்வெனுந் தன்மை விட்டுத் தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதித் தொண்டர் மறுமைக்கொன் றீய கில்லார்
ஆழ்குழிப் பட்ட போது வலக்கணில் ஒருவர்க் காவர்
யாழ்முயன் றிருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 7.8.7

080
உதிரநீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்கு கைம்மேல்
வருவதோர் மாயக் கூரை வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்
கரியமால் அயனுந் தேடிக் கழலிணை காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 7.8.8

081
பொய்த்தன்மைத் தாய மாயப் போர்வையை மெய்யென் றெண்ணும்
வித்தகத் தாய வாழ்வு வேண்டிநான் விரும்ப கில்லேன்
முத்தினைத் தொழுது நாளும் முடிகளால் வணங்கு வார்க்கு
அத்தன்மைத் தாகும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே. 7.8.9

082 தஞ்சொலார் அருள் பயக்குந் தமியனேன் தடமு லைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாங் கண்டத் தெங்கள் நாதனை நணுகு வாரே. 7.8.10

திருச்சிற்றம்பலம்