சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.014 திருப்பாச்சிலாச்சிராமம்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மாற்றறிவரதர், தேவியார் – பாலசுந்தரியம்மை


பண் – தக்கராகம்

134
வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும் நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பித்தரே யொத்தோர் நச்சில ராகில் இவரலா தில்லையோ பிரானார். 7.14.1

135
அன்னையே என்னேன் அத்தனே என்னேன் அடிகளே அமையுமென் றிருந்தேன்
என்னையும் ஒருவன் உளனென்று கருதி இறையிறை திருவருள் காட்டாய்
அன்னமாம் பொய்கை சூழ்தரு பாச்சி லாச்சிரா மத்துறை அடிகள்
பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில் இவரலா தில்லையோ பிரானார். 7.14.2

136
உற்றபோ தல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையுமென் றிருந்தேன்
செற்றவர் புரமூன் றெரியெழச் செற்ற செஞ்சடை நஞ்சடை கண்டர்
அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் தடிகள்தா மியாதுசொன் னாலும்
பெற்றபோ துகந்து பெறாவிடில் இகழில் இவரலா தில்லையோ பிரானார். 7.14.3

137
நாச்சில பேசி நமர்பிறர் என்று நன்றுதீ தென்கிலர் மற்றோர்
பூச்சிலை நெஞ்சே பொன்விளை கழனிப் புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப்
பாச்சிலாச் சிராமத் தடிகளென் றிவர்தாம் பலரையும் ஆட்கொள்வர் பரிந்தோர்
பேச்சிலர் ஒன்றைத் தரவில ராகில் இவரலா தில்லையோ பிரானார். 7.14.4

138
வரிந்தவெஞ் சிலையால் அந்தரத் தெயிலை வாட்டிய வகையின ரேனும்
புரிந்தஅந் நாளே புகழ்தக்க அடிமை போகுநாள் வீழுநா ளாகிப்
பரிந்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் தடிகள்தா மியாதுசொன் னாலும்
பிரிந்திறைப் போதிற் பேர்வதே யாகில் இவரலா தில்லையோ பிரானார். 7.14.5

139
செடித்தவஞ் செய்வார் சென்றுழிச் செல்லேன் தீவினை செற்றிடு மென்று
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் ஆவதும் அறிவரெம் மடிகள்
படைத்தலைச் சூலம் பற்றிய கையர் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிடித்தவெண் ணீறே பூசுவ தானால் இவரலா தில்லையோ பிரானார். 7.14.6

140
கையது கபாலங் காடுறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர்
மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல் வெண்டிங்கள் சூடிய விகிர்தர்
பையர வல்குற் பாவைய ராடும் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
மெய்யரே ஒத்தோர் பொய்செய்வ தாகில் இவரலா தில்லையோ பிரானார். 7.14.7

141
நிணம்படும் உடலை நிலைமையென் றோரேன் நெஞ்சமே தஞ்சமென் றிருந்தேன்
கணம்படிந் தேத்திக் கங்குலும் பகலுங் கருத்தினாற் கைதொழு தெழுவேன்
பணம்படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணம்படு காட்டில் ஆடுவ தாகில் இவரலா தில்லையோ பிரானார். 7.14.8

142 குழைத்துவந் தோடிக் கூடுதி நெஞ்சே குற்றேவல் நாடொறுஞ் செய்வான்
இழைத்தநாள் கடவார் அன்பில ரேனும் எம்பெரு மானென்றெப் போதும்
அழைத்தவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத் தடிகள்தாம் யாதுசொன் னாலும்
பிழைத்தது பொறுத்தொன் றீகில ராகில் இவரலா தில்லையோ பிரானார். 7.14.9

143
துணிப்படும் உடையுஞ் சுண்ணவெண் ணீறுந் தோற்றமுஞ் சிந்தித்துக் காணில்
மணிப்படு கண்டனை வாயினாற் கூறி மனத்தினாற் றொண்டனேன் நினைவேன்
பணிப்படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர்
பிணிப்பட ஆண்டு பணிப்பில ராகில் இவரலா தில்லையோ பிரானார். 7.14.10

144 ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க் கடியனும் ஆனேன்
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண்மலர்ச் சேவடி காட்டாய்
அருமையாம் புகழார்க் கருள்செயும் பாச்சி லாச்சிரா மத்தெம் மடிகள்
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில் இவரலா தில்லையோ பிரானார். 7.14.11

145
ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல எம்பெரு மானென்றெப் போதும்
பாயின புகழான் பாச்சிலாச் சிராமத் தடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினாற் கூறி மனத்தினால் நினைவான் வளவயல் நாவலா ரூரன்
பேசின பேச்சைப் பொறுக்கில ராகில் இவரலா தில்லையோ பிரானார். 7.14.12

திருச்சிற்றம்பலம்