சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.015 திருநாட்டியத்தான்குடி


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கரிநாதேசுவரர், தேவியார் – மலர்மங்கையம்மை


பண் – தக்கராகம்

146
பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன் புறங்காட் டாடல்கண் டிகழேன்
பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன் பிறவே னாகிலும் மறவேன்
காணீ ராகிலுங் காண்பனென் மனத்தாற் கருதீ ராகிலுங் கருதி
நானே லும்மடி பாடுதல் ஒழியேன் நாட்டியத் தான்குடி நம்பீ. 7.15.1

147
கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட் டெல்லியில் ஆடலைக் கவர்வன்
துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தி
வைச்சே யிடர்களைக் களைந்திட வல்ல மணியே மாணிக்க வண்ணா
நச்சேன் ஒருவரை நானுமை யல்லால் நாட்டியத் தான்குடி நம்பீ. 7.15.2

148
அஞ்சா தேயுமக் காட்செய வல்லேன் யாதினுக் காசைப் படுகேன்
பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை பங்கா எம்பர மேட்டீ
மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த மணியே மாணிக்க வண்ணா
நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ நாட்டியத் தான்குடி நம்பீ. 7.15.3

149
கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை கல்லா தேபல கற்றேன்
நில்லே னல்லேன் நின்வழி நின்றார் தம்முடை நீதியை நினைய
வல்லே னல்லேன் பொன்னடி பரவ மாட்டேன் மறுமையை நினைய
நல்லே னல்லேன் நானுமக் கல்லால நாட்டியத் தான்குடி நம்பீ. 7.15.4

150
மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக் கருதா தார்தமைக் கருதேன்
ஒட்டீ ராகிலும் ஒட்டுவன் அடியேன் உம்மடி யடைந்தவர்க் கடிமைப்
பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும் நாடியும் அறிய
நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன் நாட்டியத் தான்குடி நம்பீ. 7.15.5

151
படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம் படுத்தா யென்றல்லல் பறையேன்
குடப்பாச் சிலுறை கோக்குளிர் வானே கோனே கூற்றுதைத் தானே
மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடும் மறையோ தீமங்கை பங்கா
நடப்பீ ராகிலும் நடப்பனும் மடிக்கே நாட்டியத் தான்குடி நம்பீ. 7.15.6

152
ஐவாய் அரவினை மதியுடன் வைத்த அழகா அமரர்கள் தலைவா
எய்வான் வைத்ததோர் இலக்கினை அணைதர நினைந்தேன் உள்ளமுள் ளளவும்
உய்வான் எண்ணிவந் தும்மடி அடைந்தேன் உகவீ ராகிலும் உகப்பன்
நைவா னன்றுமக் காட்பட்ட தடியேன் நாட்டியத் தான்குடி நம்பீ. 7.15.7

153
கலியேன் மானுட வாழ்க்கையொன் றாகக் கருதிடிற் கண்கணீர் பில்கும்
பலிதேர்ந் துண்பதோர் பண்புகண் டிகழேன் பசுவே ஏறிலும் பழியேன்
வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன் மாட்டேன் மறுமையை நினையேன்
நலியேன் ஒருவரை நானுமை யல்லால் நாட்டியத் தான்குடி நம்பீ. 7.15.8

154
குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள் கொண்டா ராகிலுங் கொள்ளக்
கண்டா லுங்கரு தேன்எரு தேறுங் கண்ணா நின்னல தறியேன்
தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு தொழுதேன் என்வினை போக
நண்டா டும்வயற் றண்டலை வேலி நாட்டியத் தான்குடி நம்பீ. 7.15.9

155
கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன் திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் றொண்டீர் பாடநும் பாவம்பற் றறுமே. 7.15.10

திருச்சிற்றம்பலம்