சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.016 திருக்கலையநல்லூர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அமிர்தகலைநாதர், தேவியார் – அமிர்தவல்லியம்மை


பண் – தக்கராகம்

156 குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே. 7.16.1

157
செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி
இருள்மேவும் அந்தகன்மேற் றிரிசூலம் பாய்ச்சி
இந்திரனைத் தோள்முரித்த இறையவனூர் வினவிற்
பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்
பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருக
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்
களிவண்டின் கணமிரியுங் கலயநல்லூர் காணே. 7.16.2

158
இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது வியற்றி
இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்
துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்
தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவில்
மண்டபமுங் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்
மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்
கண்டவர்கண் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே. 7.16.3

159
மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்
மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகுடன்றான் மூடவிருள் ஓடும்வகை நெற்றி
ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில்
அலையடைந்த புனல்பெருகி யானைமருப் பிடறி
அகிலொடுசந் துந்திவரும் அரிசிலின்றென் கரைமேற்
கலையடைந்து கலிகடியந் தணர்ஓமப் புகையாற்
கணமுகில்போன் றணிகிளருங் கலயநல்லூர் காணே. 7.16.4

160
நிற்பானுங் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்
வெற்பார்வில் அரவுநாண் எரியம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவிற்
சொற்பால பொருட்பால சுருதியொரு நான்குந்
தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் றிறத்தே
கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார்
கலைபயிலந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே. 7.16.5

161
பெற்றிமையொன் றறியாத தக்கனது வேள்விப்
பெருந்தேவர் *சிரந்தோள்பல் கரங்கண்பீ டழியச்
செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலாற் றேய்வித்
தருள்பெருகு சிவபெருமான் சேர்தருமூர் வினவில்
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமுந்
திரைபொருது வருபுனல்சேர் #அரிசிலின்றென் கரைமேற்
கற்றினநன் கரும்பின்முளை கறிகற்கக் கறவை
கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே. 7.16.6

162
இலங்கையர்கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் டோ ளும்
இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மே லூன்றி
நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற் றாகாச மாகி
நிற்பனவும் நடப்பனவாம் நின்மலனூர் வினவிற்
பலங்கள்பல திரையுந்திப் பருமணிபொன் கொழித்துப்
பாதிரிசந் தகிலினொடு கேதகையும் பருகிக்
கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்றென் கரைமேற்
கயலுகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே. 7.16.7

163
மாலயனுங் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன்
வன்னிமதி சென்னிமிசை வைத்தவன்மொய்த் தெழுந்த
வேலைவிட முண்டமணி கண்டன்விடை யூரும்
விமலனுமை யவளோடு மேவியஊர் வினவிற்
சோலைமலி குயில்கூவக் கோலமயி லாலச்
சுரும்பொடுவண் டிசைமுரலப் பசுங்கிளிசொற் றுதிக்கக்
காலையிலும் மாலையிலுங் கடவுளடி பணிந்து
கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே. 7.16.8

164
பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது
பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன்
கரும்புவிலின் மலர்வாளிக் காமனுடல் வேவக்
கனல்விழித்த கண்ணுதலோன் கருதுமூர் வினவில்
இரும்புனல்வெண் டிரைபெருகி ஏலம்இல வங்கம்
இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின்றென் கரைமேற்
கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்
கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே. 7.16.9

165
தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்திற்
றடங்கொள்பெருங் கோயில்தனிற் றக்கவகை யாலே
வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய
மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்
விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்றென் கரைமேற்
கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த
கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே. 7.16.10

166
தண்புனலும் வெண்மதியுந் தாங்கியசெஞ் சடையன்
தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
உண்பலிகொண் டுழல்பரமன் உறையுமூர் நிறைநீர்
ஒழுகுபுனல் அரிசிலின்றென் கலயநல்லூர் அதனை
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்
பண்பயிலும் பத்துமிவை பத்திசெய்து நித்தம்
பாடவல்லா ரல்லலொடு பாவமிலர் தாமே. 7.16.11

திருச்சிற்றம்பலம்