சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.017 திருநாவலூர்


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நாவலீசுவரர், தேவியார் – சுந்தராம்பிகை


பண் – நட்டராகம்

167
கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரந் தீயெழு வித்தவன் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை யாளுங்கொண்ட
நாவல னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 7.17.1

168
தன்மையி னாலடி யேனைத்தாம் ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் தென்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 7.17.2

169
வேகங்கொண் டோ டிய வெள்விடை ஏறியோர் மெல்லியலை
ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார்
போகங்கொண் டார்*கடற் கோடியின் மோடியைப் பூண்பதாக
நாகங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 7.17.3

170
அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற் சேவினை ஆட்சிகொண்டார்
தஞ்சங்கொண் டாரடிச் சண்டியைத் தாமென வைத்துகந்தார்
நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டு
நஞ்சங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 7.17.4

171
உம்பரார் கோனைத்திண் டோ ள்முரித் தாருரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ண நீற்றரோர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 7.17.5

172
கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங் கோவலுங் கோத்திட்டையும்
வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார்
ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம் பலத்தே அருக்கனைமுன்
நாட்டங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 7.17.6

173
தாயவ ளாய்த்தந்தை யாகிச் சாதல் பிறத்தலின்றிப்
போயக லாமைத்தன் பொன்னடிக் கென்னைப் பொருந்தவைத்த
வேயவ னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயக னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 7.17.7

174
வாயாடி மாமறை ஓதியோர் வேதிய னாகிவந்து
தீயாடி யார்சினக் கேழலின் பின்சென்றோர் வேடுவனாய்
வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயாடி யார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 7.17.8

175
படமாடு பாம்பணை யானுக்கும் பாவைநல் லாள்தனக்கும்
வடமாடு மால்விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்தொருநாள்
இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நடமாடி யார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 7.17.9

176
மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத் தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல் வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கவொண் ணாததோர் வேழத்தி னையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. 7.17.10

177
நாதனுக் கூர்நமக் கூர்நர சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும் ஊரணி நாவலூரென்
றோதநற் றக்கவன் றொண்டனா ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர் தம்வினை கட்டறுமே. 7.17.11

திருச்சிற்றம்பலம்