சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.018 திருவேள்விக்குடி


திருச்சிற்றம்பலம்


பண் – நட்டராகம்

178
மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத் தூரினு மாகச்சிந் திக்கினல்லாற்
காப்பது வேள்விக் குடிதண் டுருத்தியெங் கோன்அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே. 7.18.1

179 கட்டக்காட் டில்நட மாடுவரி யாவர்க்குங் காட்சியொண்ணார்
சுட்டவெண் ணீறணிந் தாடுவர் பாடுவர் தூயநெய்யால்
வட்டக்குண் டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார்
அட்டக்கொண் டுண்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே. 7.18.2

180
பேருமோர் ஆயிரம் பேருடை யார்பெண்ணோ டாணுமல்லர்
ஊரும தொற்றியூர் மற்றையூர் பெற்றவா நாமறியோம்
காருங் கருங்கடல் நஞ்சமு துண்டுகண் டங்கறுத்தார்க்
காரம்பாம் பாவ தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே. 7.18.3

181
ஏனக்கொம் பும்மிள ஆமையும் பூண்டங்கோர் ஏறுமேறிக்
கானக்காட் டிற்றொண்டர் கண்டன சொல்லியுங் காமுறவே
மானைத்தோல் ஒன்றை உடுத்துப் புலித்தோல் பியற்குமிட்டு
யானைத்தோல் போர்ப்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே. 7.18.4

182
ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊணிலர் ஊரிடு பிச்சையல்லாற்
பூட்டிக்கொண் டேற்றினை ஏறுவர் ஏறியோர் பூதந்தம்பாற்
பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ றும்பல பாம்புபற்றி
ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே. 7.18.5

183
குறவனார் தம்மகள் தம்மக னார்மண வாட்டிகொல்லை
மறவனா ராயங்கோர் பன்றிப்பின் போவது மாயங்கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதிய ராயங்கோர் சோர்வுபடா
அறவனார் ஆவத றிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே. 7.18.6

184
பித்தரை ஒத்தொரு பெற்றியர் நற்றவை என்னைப்பெற்ற
முத்தவை தம்மனை தந்தைக்குந் தவ்வைக்குந் தம்பிரானார்
செத்தவர் தந்தலை யிற்பலி கொள்வதே செல்வமாகில்
அத்தவம் ஆவத றிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே. 7.18.7

185
உம்பரான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலருறைவான்
தம்பரம் அல்லவர் சிந்திப்ப வர்தடு மாற்றறுப்பார்
எம்பரம் அல்லவர் என்னெஞ்சத் துள்ளும் இருப்பதாகில்
அம்பரம் ஆவத றிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே. 7.18.8

186
இந்திர னுக்கும் இராவண னுக்கும் அருள்புரிந்தார்
மந்திரம் ஓதுவர் மாமறை பாடுவர் மான்மறியர்
சிந்துரக் கண்ணனும் நான்முக னும்முட னாய்த்தனியே
அந்தரஞ் செல்வத றிந்தோமேல் நாமிவர்க் காட்படோ மே. 7.18.9

187
கூடலர் மன்னன் குலநாவ லூர்க்கோன் நலத்தமிழைப்
பாடவல் லபர மன்னடி யார்க்கடி மைவழுவார்
நாடவல் லதொண்டன் ஆரூரன் ஆட்படு மாறுசொல்லிப்
பாடவல் லார்பர லோகத் திருப்பது பண்டமன்றே. 7.18.10

திருச்சிற்றம்பலம்