சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.020 திருக்கோளிலி


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கோளிலிநாதர் -தேவியார் – வண்டமர்பூங்குழலம்மை


பண் – நட்டராகம்

199
நீள நினைந்தடி யேனுமை நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மட வாளவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெரு மான்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெரு மானவை அட்டித் தரப்பணியே. 7.20.1

200
வண்டம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய்
விண்டவர் தம்புர மூன்றெரி செய்தவெம் வேதியனே
தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே. 7.20.1
201
பாதியோர் பெண்ணைவைத் தாய்பட ருஞ்சடைக் கங்கைவைத்தாய்
மாதர்நல் லார்வருத் தம்மது நீயும் அறிதியன்றே
கோதில் பொழில்புடை சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆதியே அற்புத னேயவை அட்டித் தரப்பணியே. 7.20.3

202
சொல்லுவ தென்னுனை நான்தொண்டை வாயுமை நங்கையைநீ
புல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு பூசல்செய் தாருளரோ
கொல்லை வளம்புற விற்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
அல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே. 7.20.4

203
முல்லை முறுவல் உமையொரு பங்குடை முக்கணனே
பல்லயர் வெண்டலை யிற்பலி கொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே. 7.20.5

204
குரவம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய்
பரவை பசிவருத் தம்மது நீயும் அறிதியன்றே
குரவம ரும்பொழில் சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
அரவ மசைத்தவ னேயவை அட்டித் தரப்பணியே. 7.20.6

205 எம்பெரு மானுனை யேநினைந் தேத்துவன் எப்பொழுதும்
வம்பம ருங்குழ லாளொரு பாகம மர்ந்தவனே
செம்பொனின் மாளிகை சூழ்திருக் கோளிலி எம்பெருமான்
அன்பது வாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே. 7.20.7

206
அரக்கன் முடிகரங் கள்அடர்த் திட்டவெம் மாதிபிரான்
பரக்கும் அரவல்கு லாள்பர வையவள் வாடுகின்றாள்
குரக்கினங் கள்குதி கொள்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
இரக்கம தாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே. 7.20.8

207
பண்டைய மால்பிர மன்பறந் தும்மிடந் தும்மயர்ந்துங்
கண்டில ராயவர் கள்கழல் காண்பரி தாயபிரான்
தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே. 7.20.9

208
கொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பர வுந்திரு நாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண் டிநினைந் தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துல கின்அண்டர் வானுல காள்பவரே. 7.20.10

திருச்சிற்றம்பலம்