சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.028 திருக்கடவூர்வீரட்டம்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அமிர்தகடேசுவரர், தேவியார் – அபிராமியம்மை


பண் – நட்டராகம்

திருச்சிற்றம்பலம்

279
பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே. 7.28.1

280
பிறையா ருஞ்சடையாய் பிரமன்றலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறையின்பொரு ளானவனே
கறையா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. 7.28.2

281
அன்றா லின்னிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான்
கன்றாருங் கரவா கடவூர்த்திரு வீரட்டத்துள்
என்றா தைபெருமான் எனக்கார்துணை நீயலதே. 7.28.3

282
போரா ருங்கரியின் னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. 7.28.4

283
மையார் கண்டத்தினாய் மதமாவுரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருள் புகுந்தாயின்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கடவூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. 7.28.5

284
மண்ணீர் தீவெளிகால் வருபூதங்க ளாகிமற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே
கண்ணா ரும்மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே. 7.28.6

285
எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே
நரியா ருஞ்சுடலை நகுவெண்டலை கொண்டவனே
கரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்கார்துணை நீயலதே. 7.28.7

286
வேறா உன்னடியேன் விளங்குங்குழைக் காதுடையாய்
தேறேன் உன்னையல்லாற் சிவனேயென் செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்கார்துணை நீயலதே. 7.28.8

287
அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய
பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கடவூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்கார்துணை நீயலதே. 7.28.9

288
காரா ரும்பொழில்சூழ் கடவூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத் துணையாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான் அடித்தொண்டன் உரைத்ததமிழ்
பாரோ ரேத்தவல்லார் பரலோகத் திருப்பாரே. 7.28.10

திருச்சிற்றம்பலம்