சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

சுந்தரமூர்த்தி பெருமான் அருளிய ஏழாம் திருமுறை

100 பதிகங்கள் – 1026 பாடல்கள் – 84 கோவில்கள்


7.030 திருக்கருப்பறியலூர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – குற்றம்பொறுத்தவீசுவரர் தேவியார் – கோல்வளைநாயகியம்மை


பண் – நட்டராகம்

299
சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து திறம்பா வண்ணங்
கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக் கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங் கொகுடிக் கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. 7.30.1

300
நீற்றாரும் மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே நிறைந்து தோன்றுங்
காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக் கருப்ப றியலூர்க்
கூற்றானைக் கூற்றுதைத்துக் கோல்வளையாள் அவளோடுங் கொகுடிக் கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. 7.30.2

301
முட்டாமே நாடோ றும் நீர்மூழ்கிப் பூப்பறித்து மூன்று போதுங்
கட்டார்ந்த இண்டைகொண் டடிச்சேர்த்தும் அந்தணர்தங் கருப்ப றியலூர்
கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக் குழகனைக் கொகுடிக் கோயில்
எட்டான மூர்த்தியை நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. 7.30.3

302
விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி வினைபோக வேலி தோறுங்
கருந்தாள வாழைமேற் செங்கனிகள் தேன்சொரியுங் கருப்ப றியலூர்க்
குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையாள் அவளோடுங் கொகுடிக் கோயில்
இருந்தானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. 7.30.4

303
பொடியேறு திருமேனிப் பெருமானைப் பொங்கரவக் கச்சை யானைக்
கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை குதிகொள்ளுங் கருப்ப றியலூர்க்
கொடியேறி வண்டினமுந் தண்டேனும் பண்செய்யுங் கோகுடிக் கோயில்
அடியேறு கழலானை நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. 7.30.5

304
பொய்யாத வாய்மையாற் பொடிப்பூசிப் போற்றிசைத்துப் பூசை செய்து
கையினா லெரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தங் கருப்ப றியலூர்க்
கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலுங் கொகுடிக் கோயில்
ஐயனையென் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. 7.30.6

305
செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந் தீர்ந்தொழியச் சிந்தை செய்ம்மின்
கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி கண்படுக்குங் கருப்ப றியலூர்க்
கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையாள் அவளோடுங் கொகுடிக் கோயில்
அடிகளையென் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. 7.30.7

306
பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் பன்னாளும் பாடி யாடிக்
கறையார்ந்த கண்டத்தன் எண்டோ ளன் முக்கண்ணன் கருப்ப றியலூர்க்
குறையாத மறைநாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக் கோயில்
உறைவானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. 7.30.8

307
சங்கேந்து கையானுந் தாமரையின் மேலானுந் தன்மை காணாக்
கங்கார்ந்த வார்சடைகள் உடையானை விடையானைக் கருப்ப றியலூர்க்
கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள் பலவுதிர்க்குங் கொகுடிக் கோயில்
எங்கோனை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. 7.30.9

308
பண்டாழின் இசைமுரலப் பன்னாளும் பாவித்துப் பாடி யாடிக்
கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம் பூஞ்சோலைக் கருப்ப றியலூர்க்
குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும் புறங்கூறுங் கொகுடிக் கோயில்
எண்டோ ளெம் பெருமானை நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. 7.30.10

309
கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் மிடர்தீர்க்குங் கருப்ப றியலூர்க்
குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் பூஞ்சோலைக் கொகுடிக் கோயில்
இலைமலிந்த மழுவானை மனத்தினா லன்புசெய் தின்ப மெய்தி
மலைமலிந்த தோள்ஊரன் வனப்பகையப் பன்னுரைத்த வண்ட மிழ்களே. 7.30.11

திருச்சிற்றம்பலம்